நாளை முதல் மளிகைக்கடைகள் செயல்பட அனுமதி: என்னென்ன கட்டுப்பாடுகள்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

நாளை முதல் மளிகைக்கடைகள் செயல்பட அனுமதி: என்னென்ன கட்டுப்பாடுகள்?

நாளை முதல் மளிகைக்கடைகள் செயல்பட அனுமதி: என்னென்ன கட்டுப்பாடுகள்?


கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இதனிடையே, கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கடந்த 24ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. காய்கறிகளை நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை செய்யவும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்த இந்த தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவானது ஜூன் 7ஆம் தேதியுடன் (நாளை) முடிவடைகிறது.



இதையடுத்து, வருகிற 14ஆம் தேதி வரை மேலும் சில தளர்வுகளை அளித்து ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, தனியாக செயல்படுகிற மளிகை, பலசரக்குக் கடைகள், காய்கறிக் கடைகளை திறந்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இக்கடைகளை நாளை முதல் திறந்து கொள்ளலாம்.

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மளிகை, பலசரக்குக் கடைகள், காய்கறிக் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து சரீர விலகலை கடைப்பிடித்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்லக் கூடாது, தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளிலேயே நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும், இரு, நான்கு சக்கர வாகனங்களில் கடைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad