ஆவின் பாலகத்தில் மாமூல் கேட்டு ரகளை: திமுக நிர்வாகி மீது புகார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 23, 2021

ஆவின் பாலகத்தில் மாமூல் கேட்டு ரகளை: திமுக நிர்வாகி மீது புகார்!

ஆவின் பாலகத்தில் மாமூல் கேட்டு ரகளை: திமுக நிர்வாகி மீது புகார்!


ஆவின் பாலகம் நடத்தும் பால் முகவரிடம் மாமூல் கேட்டு அராஜகத்தில் ஈடுபடும் திமுக நிர்வாகியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பால் முகவர்கள் சங்க தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம், போத்தனூர் செட்டிபாளையத்தில் ஆவின் பாலகம் நடத்தி வரும் பால் முகவரான திருமதி. வேலுமணி என்பவரிடம் திமுக கோவை மாவட்ட விவசாய அணி துணைத் தலைவராக இருக்கும் ராமசாமி என்பவர் ஆட்சி மாறி விட்டதால் எனக்கு தினசரி 300.00ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும் அப்போது தான் ஆவின் பாலகம் நடத்த விடுவேன், மாமூல் தர மறுத்தால் பாலகம் நடத்த விட மாட்டேன் என தொடர்ந்து மிரட்டி வந்துள்ளதோடு, எழுதப்படிக்கத் தெரியாத, கணவனை இழந்த பெண் பால் முகவரான வேலுமணியிடம் திமுக நிர்வாகியான ராமசாமி வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி அதன் மூலம் ஆவின் பாலகத்திற்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தை மின்வாரிய ஊழியர்கள் துணையோடு துண்டிக்க வைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.

கணவனை இழந்து நான்கு பிள்ளைகளோடு ஆவின் பாலகத்தை நம்பி பிழைப்பு நடத்தி வரும் பால் முகவர் பெண் என்றும், வயதானவர் என்றும் பாராமல் அவரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய திமுக விவசாய அணி துணை மாவட்ட தலைவரின் அராஜகப் போக்கினை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கொரோனா நோய் தொற்று காரணமாக ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகளாக பால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு அதன் காரணமாக வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கிப் போயிருக்கும் நிலையில் திமுக நிர்வாகியின் அராஜகத்தினால் அந்த மூதாட்டி பால் வணிகம் செய்திட கடும் சிரமப்பட்டு வருகிறார்.

எனவே ஆவின் பாலகம் நடத்தி வரும் பால் முகவர் வேலுமணியிடம் மாமூல் கேட்டு மிரட்டி வருவதோடு, அவரது பாலகத்திற்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தை துண்டிக்க வைத்து அராஜகத்தில் ஈடுபட்ட திமுக விவசாய அணி துணை மாவட்ட தலைவர் ராமசாமியை கைது செய்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பால் முகவரின் பாலகத்திற்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கிடவும், அவர் எந்தவிதமான இடையூறுமின்றி பால் வணிகம் செய்திடவும் தமிழக முதல்வர் அவர்கள் ஆவண செய்திட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad