பலி கேட்கும் பதாகைகளுக்கு முடிவுகட்டுவாரா முதல்வர்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

பலி கேட்கும் பதாகைகளுக்கு முடிவுகட்டுவாரா முதல்வர்?

பலி கேட்கும் பதாகைகளுக்கு முடிவுகட்டுவாரா முதல்வர்?

விழுப்புரம் மாவட்டத்தில் திருமணத்துக்குச் சென்ற உயர்கல்வி அமைச்சர் பொன்முடியை வரவேற்று பதாகை வைக்கப்பட்டது. அந்தப் பதாகையை வைக்கும் பணியில் ஈடுபட்ட 13 வயதுச் சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

அதிரவைக்கும் இந்தச் சம்பவம் தமிழக அரசியலின் விரும்பத்தகாத ஒரு போக்கின் அபாயத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. எவ்வளவு அசம்பாவிதங்கள் நடந்தாலும் சில தவறுகளை அரசியல்வாதிகள் திருத்திக்கொள்வதே இல்லை என்னும் கசப்பான உண்மையையும் இது மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு சென்னை பள்ளிக்கரணையில் பொறியாளர் சுபஸ்ரீ என்பவர் சாலையில் வைக்கப்பட்டிருந்த பதாகை விழுந்து லாரியில் சிக்கி பலியானபோதும் இதேபோன்ற அதிர்ச்சிகளும் கண்டனங்களும் எழுந்தன. அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தனது மகன் திருமணத்திற்காகச் சாலையின் நடுவே வைத்த பேனர் சுபஸ்ரீயின் உயிரைப் பலி கொண்டது.

அரசியல் கட்சிகளின் விளம்பர வெறி
banner 3.
அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், பரப்புரைகள், அரசியல் தலைவர்களின் பயணங்கள், சிறப்பு விஜயங்கள் ஆகியவற்றோடு நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு சங்கதிதான் வானளாவ வைக்கப்படும் பேனர்கள் அல்லது பதாகைகள். தங்கள் பிம்பத்தைப் பொது வெளியில் ஊதிப் பெருக்கிக் காட்ட விழையும் அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் உருவாக்கிய கலாச்சாரம் இது.

மாபெரும் பதாகைகளை உருவாக்குவதற்கு ஓவியர்கள் பல நாட்கள் உழைக்க வேண்டிய நிலையையும் அதற்காக அதிகமாகச் செலவு செய்ய வேண்டிய அவசியத்தையும் டிஜிட்டல் தொழில்நுட்பம் அடியோடு மாற்றிவிட்ட நிலையில் ஆளுயர கட் அவுட்களும் மாபெரும் பேனர்களும் ஜனநாயகப்படுத்தப்பட்டன. பொதுமக்களும் இவற்றைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். திருமணம், காது குத்தும் விழா, பூப்புனித நீராட்டு விழா, விளையாட்டுப் போட்டிகள், இறுதிச் சடங்கு என்று எல்லாவற்றுக்கும் மாபெரும் பேனர்கள் என்பது வழக்கமாகவே ஆகிவிட்டது. விளம்பரங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
banner 2.

பெரிய பெரிய பேனர்களை சாலையோரங்களில் மட்டுமின்றிச் சாலைகளின் மீதே வைப்பதெல்லாம் வழக்கமாகிப்போனது. பேனரின் அளவு கூடக் கூட அதை வைக்கும் கட்சி அல்லது தனிநபர்களின் மதிப்பை உயர்த்திக் காட்டும் என்னும் கண்ணோட்டம் பேனர்களின் அளவில் மட்டுமின்றி அவற்றின் எண்ணிக்கையிலும் தன் திருவிளையாடலை நிகழ்த்தத் தொடங்கியது. விளைவாக, ஒரு தலைவர் ஓரிடத்திற்கு விஜயம் செய்கிறார் என்றால் அவர் வரும் வழி நெடுகிலும் பதாகைகள் வைத்து அமர்க்களப்படுத்தும் வழக்கம் உருவானது.
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே இதில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. பிற கட்சிகளும் மாநாடுகள், பேரணிகள் நடத்தும்போது இந்த இரு கட்சிகளுக்கு இணையாகப் பதாகைகளை அமைப்பதும் தமிழக அரசியலின் வழக்கமாக காட்சிகளில் ஒன்றாக மாறிவிட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய கட்சி அலுவலகத்திற்குச் செல்லும்போது அவரை வரவேற்றுப் பதாகைகள் அமைக்கும் அளவுக்கு இந்தப் போக்கு முற்றிப்போனது. தலைவர்களைப் பின்பற்றி அடுத்த நிலைத் தலைவர்களும் உள்ளூர்ப் பெருந்தலைகளும் இதைத் தத்தமது அளவில் செயல்படுத்தத் தொடங்கினார்கள்.

இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போதும் அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு சாலைகளிலும் நடைபாதைகளிலும் விளம்பரப் பதாகைகளை அமைத்துப் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தின.

தொடரும் அத்துமீறல்கள்

பொது வெளிகளில் நடக்கும் இத்தகைய அத்துமீறல்களைத் துணிச்சலுடன் தட்டிக் கேட்பதையே தன் வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்த டிராபிக் ராமசாமி இந்த பேனர் கலாச்சாரத்திற்கு எதிரான சட்டப் போரை நடத்திவந்தார். சட்ட விரோதமான பேனர்களை – அவை ஜெயலலிதாவின் பேனராகவோ கருணாநிதியின் பேனராகவோ இருந்தாலும் சரி – அதிரடியாக அவற்றை அடித்துக் கீழே தள்ளுமளவுக்கு அவருடைய தார்மிக ஆவேசமும் போர்க்குணமும் இருந்தன. நீதிமன்றங்கள் பதாகைகள் குறித்துப் பல முறை கடுமையான தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன. மாநகராட்சிகள் பதாகைகள் தொடர்பாக விதிமுறைகள் வகுத்திருக்கின்றன. பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைத்தால் ஓராண்டு சிறை; ரூ.5000 அபராதம் எனச் சென்னை மாநகராட்சி இரு ஆண்டுகளுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது. எனினும் அரசியல் கட்சிகள் இதையெல்லாம் மீறுவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.

விழுப்புரத்தில் சிறுவன் தினேஷ் பலியானதைத் தொடர்ந்து மீண்டும் இது குறித்த கண்டனங்கள் எழுகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் திருமணத்துக்குச் சென்ற உயர்கல்வி அமைச்சர் பொன்முடியை வரவேற்பதற்காக பேனர் அமைக்கும் பணியின்போதுதான் அந்தச் சிறுவன் இறந்துள்ளார். அந்தச் சிறுவனின் குடும்பத்துக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் இழப்பீடு அளித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிய வேண்டும் என அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அதிமுக பிரமுகர் வீட்டுத் திருமண விழாவிற்காக அமைக்கப்பட்ட பேனர் இடிந்து விழுந்து சுபஸ்ரீ இறந்தது அதிமுகவுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை.

subashree
விழுப்புரத்தில் சிறுவனின் மரணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், பல முறை கண்டித்தபிறகும் பேனர் கலாச்சாரம் தொடர்வது வருத்தமளிக்கிறது என்று அதில் கூறினார். “பேனர் கலாச்சாரத்தை நிறுத்த வேண்டும் என்ற என் வேண்டுகோளை கட்டளையாக ஏற்று திமுகவினர் செயல்படுத்த வேண்டும்” என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.

சுபஸ்ரீ உயிரிழந்த்போது அவரின் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்த ஸ்டாலின், திமுகவினர் இனி பேனர் வைக்கக் கூடாது என அறிவித்தார். அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவர். இப்போது முதல்வர். பதாகைகள் தொடர்பாகக் கறாரான சட்டமியற்றி அதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய நிலையில் அவர் இருக்கிறார். அவருடைய வேண்டுகோளைக் கட்டளையாகவே மாற்றுவதுதான் இத்தகைய பலிகளை நிறுத்துவதற்கான நடவடிக்கையாக இருக்க முடியும். அரசியல்வாதிகள் முன்னெடுத்த இந்தக் கலாச்சாரம் பலிவாங்கிய உயிர்களுக்கு ஒரு அரசியல்வாதியே செய்யும் பிராயச்சித்தமாகவும் அது இருக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad