"தலைவர்களுக்கு சிலைகள், நினைவிடங்கள் கட்ட மாட்டோம்!" - முன்னாள் முதல்வர் பளீச்!
உத்தர பிரதேச மாநிலத்தில், அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி வெற்றிப் பெற்றால், தலைவர்களுக்கு சிலைகள், நினைவிடங்கள், பூங்காக்கள் அமைக்க மாட்டோம் என, அக்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி தெரிவித்து உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறுகிறது.
இந்த மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் வேலைகளில் பா.ஜ.க., - சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில், பா.ஜ.க. இறங்கி உள்ளது. பா.ஜ.க.,வை வீழ்த்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தற்போதே தேர்தல் வேலைகளைத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:
அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றால்,
தங்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கியவர்களின் பெயரில், சிலைகள், நினைவிடங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றை அமைக்க மாட்டோம்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் பட்சத்தில், கட்சியின் முக்கிய கொள்கையான, அனைவருக்கும் பயன்; அனைவருக்கும் அமைதி என்ற திட்டத்தை அமல்படுத்துவோம். 2007ம் ஆண்டு செயல்படுத்தியதைப் போல் செயல்படுத்துவோம்.
No comments:
Post a Comment