தமிழக அரசுக்கு அண்ணாமலை கேட்கும் லாஜிக்கான கேள்வி!
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், முழுமையாக குறையவில்லை. இதனால், வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு நீட்டித்துள்ளது. அதேசமயம், ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கப்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், சமுதாய அரசியல் கலாசார நிகழ்வுகள், திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, வெள்ளி, சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை கேடிசி நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி படை பலம் பண பலத்தை தாண்டி நல்லவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு என தெரிவித்தார்.
பள்ளிகள் திறப்பு என்பது காலத்தின் கட்டாயம் எனவும், பள்ளி திறப்பை பொறுத்தவரை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர், தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் திறக்கும் போது, கோயிலுக்கு வரும் பெரும்பாலானோர் தடுப்பு ஊசி செலுத்தி இருக்கும் நிலையில் வெள்ளி சனி ஞாயிறு மூடியிருக்கும் கோயிலை திறப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தினார். ஒரு சாராருக்கு மட்டும் அரசு ஆதரவாக செயல்பட கூடாது எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment