போலி சான்றிதழ்: பணியிலிருந்து நீதிபதி "டிஸ்மிஸ்!" - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

போலி சான்றிதழ்: பணியிலிருந்து நீதிபதி "டிஸ்மிஸ்!"

போலி சான்றிதழ்: பணியிலிருந்து நீதிபதி "டிஸ்மிஸ்!"

இட ஒதுக்கீடு பெறுவதற்காக, நீதிபதி ஒருவர், கடந்த 2000ம் ஆண்டு பணியில் சேர்ந்த போது, போலி சான்றிதழ் கொடுத்திருந்தது கண்டறியப்பட்டதால் அவர் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

ஜம்மு காஷ்மீரில், கடந்த 2000ம் ஆண்டு நீதிபதியாக பணியில் சேர்ந்தவர் முகமது யூசுப் அல்லை. இவர் சிவில் நீதிபதியாக பணியில் இருந்தார். இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியில் யூசுப் சேர்ந்திருந்தார். இவர் பணியில் சேரும் போது ரிசர்வ்டு பேக்வேர்டு ஏரியா எனப்படும் பின்தங்கிய பகுதியைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழை சமர்ப்பித்து பணியில் சேர்ந்திருந்தது தெரிய வந்தது.

முகமது யூசுப், உண்மையில் மிர்குண்ட் தெஹ்சில் எனப்படும் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனால் தான் சோனாவரி தெஹ்சிலில் அடங்கும் ஷில்வட் எனும் பின்தங்கிய கிராமத்துக்கு குடிபெயர்ந்ததாக சோனாவரி கிராம தலைவரால் கடந்த 3-12-1996ம் ஆண்டு சான்றிதழ் பெற்று வைத்துள்ளார்.

பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 15 ஆண்டுகள் அங்கு குடி இருந்தால் அந்தப் பகுதிகளுக்கான அரசின் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கான சான்றிதழைத்தான் முகமது யூசுப் சமர்பித்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் உண்மை கண்டறியும் குழுவினர் முகமது யூசுபின் முகவரியை சரிபார்த்த போது, அவர் அந்த பின்தங்கிய பகுதியில் வசிக்கவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து இது தொடர்பான அறிக்கை நீதித் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி பணியில் இருந்து யூசுப் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து காஷ்மீர் லடாக் உயர் நீதிமன்றத்தில் யூசுப் முறையிட்டார். இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம் யூசுப் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்ததுடன், அவரை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு காஷ்மீர் ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து சிவில் நீதிபதி பதவியில் இருந்து ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட யூசுப்பை, ஆளுநர் உடனடியாக பணியில் இருந்து நிரந்தரமாக விடுவித்து உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad