ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பித்த ஒரே ஒருவர்: யார் இந்த கேப்டன் வருண் சிங்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 9, 2021

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பித்த ஒரே ஒருவர்: யார் இந்த கேப்டன் வருண் சிங்?

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பித்த ஒரே ஒருவர்: யார் இந்த கேப்டன் வருண் சிங்?

நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பித்த ஒரே ஒருவர் க்ரூப் கேப்டன் வருண் சிங்.

கேப்டன் வருண் சிங், உத்தர பிரதேசத்தின் தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். விபத்து குறித்து அறிந்த பிறகு அவரின் கிராம மக்கள் வருண் சிங் விரைவாக குணமடைய வேண்டும் என்ற பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வருண் சிங்கின் உறவினர் அகிலேஷ் பிரதாப் சிங் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினார்.

புதின்கிழமை இரவு வருண் சிங்கிற்கு முக்கிய அறுவை சிகிச்சை நடந்ததாகவும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டதாகவும் அகிலேஷ் பிரதாப் சிங் தெரிவித்திருந்தார். வருண் சிங்கின் தந்தை கிருஷ்ண பிரதாப், இந்திய ராணுவத்தில் ஓய்வுப் பெற்ற கர்னல் ஆவார்.
"தற்போது வருண் சிங்கின் பெற்றோர் போபாலில் வசித்து வருகின்றனர். கேப்டன் வருண் சிங் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டனில் பணியமர்த்தப்பட்டார். தமிழ்நாட்டில்தான் வருண் சிங், அவரின் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்," என கிருஷ்ண பிரதாப் சிங்கின் மூத்த சகோதரர் தினேஷ் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
இலகுரக போர் விமானப் படையில் விங் கமாண்டராக இருந்தார். 2021 சுதந்திர தினத்தன்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் ஷௌர்ய சக்ரா பதக்கத்தை, அசாத்தியமான துணிச்சலுக்காக வாங்கினார். அக்டோபர் 12, 2020 அன்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், "அவர் ஒரு போர் விமானத்தைப் பயிற்சி ஓட்டத்தில் ஈடுபடுத்தியிருந்தார். போர் விமானத்தைப் பரிசோதனை அடிப்படையில் அவர் ஓட்டிக்கொண்டிருந்தபோது, விமானி அமரும் அறையில் காற்றழுத்தக் கட்டுப்பாடு செயலிழந்தது."
விமானம் மிக உயரமாகப் பறந்துகொண்டிருந்த சூழலில் இந்தச் சிக்கலை எதிர்கொண்டார். நெருக்கடியான சூழலிலும், பிரச்னையைச் சரியாகக் கண்டறிந்து, உயரத்தைக் குறைத்தார். அந்த நேரத்தில், போர் விமானம் அதன் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கியது. கட்டுப்பாட்டை இழந்து, வேகமாகக் கீழ்நோக்கி விழத் தொடங்கியது.
உயிருக்கு ஆபத்தான, உடல் மற்றும் மன அழுத்தம் மிகுந்த அந்தச் சூழ்நிலையிலும்கூட, துணிச்சலோடு செயல்பட்டு, விமானத்தை மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார் வருண் சிங்.
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பிறகு, சுமார் 10,000 அடி உயரத்தில் போர் விமானம் இருந்தபோது, மீண்டும் அதன் கட்டுப்பாட்டை இழந்தது. இப்படியான சூழலில் போர் விமானி, விமானத்தைக் கைவிட்டுவிட்டு, பாராசூட் மூலம் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்குத்தான் முனையும் சுதந்திரம் உண்டு.
ஆனால், சரியாகத் திட்டமிட்டு, துணிச்சலோடும் சாதுர்யமாகவும் செயல்பட்டு, விமானத்தை மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பத்திரமாக தரையிறக்கினார். இதன்மூலம், விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தைச் சேதமின்றிக் காப்பாற்றினார்.

அதுமட்டுமின்றி, தரையில் அந்த விமானம் விழுவதால் ஏற்படக்கூடிய விபத்து மூலமாக, சுற்றுவட்டாரத்தில் இருந்த மக்களுக்கும் எவ்விதச் சேதாரமும் ஏற்படுவதைத் தவிர்த்தார் என்று கூறியிருந்தது. இத்தகைய துணிச்சல் மிக்க செயலுக்காக அவருக்கு ஷௌர்ய சக்ரா பதக்கம், 2021-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad