2 நாய்களும்.. 27 வயசு மரியாவும்.. அவ்வளவு பெரிய குண்டு போட்டும்.. அசர வைக்கும் ஸ்டோரி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 23, 2022

2 நாய்களும்.. 27 வயசு மரியாவும்.. அவ்வளவு பெரிய குண்டு போட்டும்.. அசர வைக்கும் ஸ்டோரி!

மரியுபோல் நகரில் ரஷ்யா நடத்திய பெரும் குண்டு வீச்சிலிருந்து 27 வயதுப் பெண் அதிசயமாக உயிர் தப்பியுள்ளார்.

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள தியேட்டரில் ரஷ்யா நடத்திய அதி பயங்கர குண்டு வீச்சில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் ஒரே ஒரு பெண் மட்டும் அதிசயமாக உயிர் தப்பியுள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று மரியுபோல் நகரில் உள்ள ஒரு தியேட்டரைக் குறி வைத்து ரஷ்யா குண்டு வீசித் தாக்கியது. அந்த தியேட்டரில் ஏராளமான மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். பல குழந்தைகளும் அதில் அடக்கம். செல்லப் பிராணிகளையும் பலர் தங்கள் கூடவே வைத்திருந்தனர்.

ரஷ்யா நடத்திய இந்த பயங்கர தாக்குதலில் பல நூறு பேர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் அதிசயமாக உயிர் தப்பியுள்ளார். அவரது பெயர் மரியா ரொடினோவா. 27 வயதான இவர் தனது 2 நாய்க் குட்டிகளுடன் இந்த தியேட்டரில் கடந்த பல நாட்களாக அடைக்கலம் புகுந்திருந்தார். மரியா ஒரு ஆசிரியை ஆவார். தியேட்டரின் 9வது மாடியில் இவர் தங்கியிருந்தார். இவர் இருந்த இடம், குண்டு வீசி தகர்க்கப்பட்ட தியேட்டர் வளாகத்திலேயே அருகில் இருந்த கட்டடம் ஆகும்.

சம்பவத்தன்று காலை வெளியில் போய் மீன் வாங்கி வந்து அதை தனது நாய்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது குடிக்க தண்ணீர் இல்லாததை உணர்ந்த அவர் குடிநீரை எடுத்து வருவதற்காக வெளியில் வந்தார். நாய்கள் இரண்டையும் கட்டிப் போட்டு விட்டு வெளியில் வந்த அவர் அங்கு குடிநீருக்காக காத்திருந்த வரிசையில் நின்றிருந்தார். அப்போதுதான் குண்டு வீச்சுச் சம்பவம் நடந்துள்ளது.
குண்டு வீசியதும் அது வெடித்துச் சிதறியது மிகப் பெரும் பிரளயம் போல இருந்தது. கண்ணாடி ஜன்னல்கள் தெறித்து விழுந்தன. கட்டடம் தரைமட்டமானது. மரியாவின் பின்னால் நின்றிருந்த ஒரு நபர், குண்டு வீசியதில் தெறித்து விழுந்த கண்ணாடித் துண்டுகளிலிருந்து தன்னையும், மரியாவையும் காப்பாற்ற அவரை பின்னாலிருந்து வேகமாக தள்ளி விட்டார். அதில் மரியா போய் அங்கிருந்த சுவற்றில் மோதி விழுந்தார்.

குண்டு வீச்சால் எழும்பிய பெரும் சத்தத்தில் மரியாவின் காதே செவிடானது போல அப்படி அடைத்துக் கொண்டு விட்டது. காதில் பெரும் வலி. காது ஜவ்வே கிழிந்து போய் விட்டதாக பயந்து விட்டார் மரியா. மெல்ல மெல்லத்தான் அவருக்கு தன்னைச் சுற்றி நடந்தது தெரிய வந்தது. தான் உயிர் தப்பியது மிகப் பெரிய செயல் என்று உணர்ந்தார்.
மரியுபோல் நகர் இன்னும் ரஷ்யர்களின் தொடர் தாக்குதலில்தான் இருக்கிறது. அங்கு இன்னும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். மரியுபோல் நகரை பிடிப்பதில் ரஷ்யா தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. கீவ் நகரிலும் இதே நிலைதான். கார்கிவ் நகரம் மிகப் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. எந்த நகரையும் ரஷ்யப் படையினரால் பிடிக்க முடியவில்லை என்பதால் அந்த நகரங்களை அழிக்கும் வேலையில் ரஷ்யா தற்போது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவுக்கு நகரங்களை சிதைக்கும் வேலையில் ரஷ்யா இறங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad