காங்கிரஸ் கட்சிக்கு இடியாய் இறங்கிய செய்தி; தலைவர்கள் இரங்கல்!
காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமாக இருந்தவர் ராஜீவ் சாதவ். இவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக இருந்துள்ளார். இவருக்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அதிலிருந்து குணமடைந்து விட்டார். இந்நிலையில் வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளால் புனேவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்று இன்று காலை உயிரிழந்தார்.
அவருக்கு வயது 46. இவரது மறைவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், எனது நண்பன் ராஜீவ் சாதவை இழந்து தவிக்கிறேன். காங்கிரஸின் கொள்கைகளை சிறப்பான முறையில் மக்களிடம் எடுத்துச் சென்று பல்வேறு நற்பணிகளை செய்து வந்தவர். அவரது மரணம் எனக்கு பேரிழப்பாகும்.
அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், காங்கிரஸ் கட்சி தனது முன்களப் போராளியை, செயற்குழு உறுப்பினரை, மாநிலங்களவை உறுப்பினரை, அற்புதமாக இளம் தலைவரை இழந்து தவிக்கிறது. அவருடைய இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது.
அவருடைய அர்ப்பணிப்பு, செயல்பாடுகள் ஆகியவற்றை கட்சி பெரிதும் இழந்து நிற்கிறது என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பேசுகையில், ராஜீவ் சாதவின் இழப்பால் எனக்கு பேச்சே வரவில்லை. இளைஞர் காங்கிரஸ் மூலம் பொது வாழ்க்கையில் என்னுடன் ஒன்றாக காலடி எடுத்து வைத்த நண்பரை இன்று நான் இழந்துவிட்டேன்.
கடைசி வரை ஒன்றாகவே பயணித்தோம். அவருடைய எளிமை, புன்னகை, தொண்டர்களுடனான நெருக்கம், விசுவாசம், நட்பு ஆகியவற்றை என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன். போய் வா நண்பனே. நீ எங்கிருந்தாலும் சூரியனாய் பிரகாசித்து கொண்டே இருப்பாய் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment