பிறந்த நாளில் ஜெயக்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த சர்ப்ரைஸ்!
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. அதிலும் அமைச்சர்கள் பலர் தோல்வியுற்றது பேசுபொருளாக மாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். இந்த தொகுதியில் 1991ஆம் ஆண்டு முதல் வெற்றியை ஜெயக்குமார் பதிவு செய்தார். 1996ல் இந்த தொகுதி திமுக வசம் சென்றது. அதன்பிறகு 2001ல் தொடங்கி 2016 வரை தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.
கடந்த முறை மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். தினந்தோறும் காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் போன்று அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பார். இதனால் அவரை 11 மணி ஜெயக்குமார் என்று அழைக்கும் அளவிற்கு பிரபலமானார். இவ்வாறு 25 ஆண்டுகாலம் எம்.எல்.ஏவாக இருந்த ஜெயக்குமாருக்கு, இம்முறை தேர்தல் களம் அவ்வளவு சுலபமானதாக இல்லை.
திமுகவின் ஐட்ரீம் மூர்த்தியிடம் 27,779 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். கால் நூற்றாண்டு காலம் ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். ஆனால் தொகுதி மக்களுக்கு பெரிதாக எந்த நன்மையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. தொகுதியின் முக்கியப் பிரச்சினைகளை தீர்க்கவில்லை என்ற புகாரும் முன்வைக்கப்படுகிறது.
தொகுதிக்குள் நடக்கும் கட்சிக்காரர்கள் வீட்டு விசேஷங்களில் தவறாமல் பங்கேற்பது, தொகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு பொருட்களை வாங்கிக் கொடுப்பது என்றே காலத்தை கடத்தியதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் வாக்குகளாக மாறும் என்று நம்பியிருந்த ஜெயக்குமாருக்கு, தேர்தல் முடிவுகள் இடியாய் வந்து இறங்கியது. இருப்பினும் வெற்றியோ, தோல்வியோ எதுவாயினும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்.
எப்போதும் போல என் மக்கள் பணி தொடரும் என்று கூறி தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டார். இந்த சூழலில் கடந்த மே 12ஆம் தேதி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் வந்தது. இதை விமர்சையாக கொண்டாட வேண்டாம் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். மேலும் வாழ்த்து போஸ்டர்கள், பேனர்கள் எதுவும் வைக்க வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இருப்பினும் பழனிசாமிக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போது ஜெயக்குமாரிடம் சில விஷயங்களை எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மேலும் ஜெயக்குமார் தோல்வி பற்றியும் விசாரித்துள்ளார். பின்னர், தோல்வியால் துவண்டு விடாதீர்கள். மாநிலங்களவை தேர்தல் வரும்போது உங்களுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்று உறுதி அளித்திருக்கிறார்.
உடனே புன்னகை பூத்த முகமாய் ஜெயக்குமார் மலர்ந்திருக்கிறார். நாள்தோறும் செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்திய ஜெயக்குமார் தற்போது மைக்கில் பேசாமல் எப்படித் தான் இருக்கிறாரோ என்று பலரும் கேட்கின்றனர். 11 மணி ஜெயக்குமார் மாநிலங்களவை உறுப்பினராக மாறுவாரா என்று அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் தீர்மானிக்கும்.
No comments:
Post a Comment