நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..! வரும் 19ல் ஜனாதிபதியை சந்திக்கிறார்!
தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்ல உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் மேகதாது எனும் இடத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான முயற்சியில், அம்மாநில பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதை தடுக்க, தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, இரண்டாவது முறையாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்ல உள்ளார். முதலமைச்சரான பிறகு, முதல் முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவர் சந்திக்கவுள்ளார்.
கடந்த மாதம், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேகதாது திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை அவரிடம் வலியுறுத்தினார்.
குடியரசுத் தலைவருடனான முதல் சந்திப்பில், எழுவர் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தப்படலாம் என, கூறப்படுகிறது.
நீட் பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தமது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், அது குறித்தும் விவாதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் டெல்லி பயணம், அரசியல் களத்தில் மிகுந்த முக்கியத்துவத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment