சசிகலா கொளுத்திய சரவெடி; அதிமுக தலைமைக்கு செம ஷாக்!
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் கட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி என இரட்டை தலைமை இருந்தது. இருப்பினும் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி ஒற்றை அதிகார மையமாக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்தார். இருவருக்கும் இடையிலான பனிப்போர் பல்வேறு அரசியல் சூழல்களில் வெளிப்பட்டது. இந்த விஷயத்தில் மாவட்ட செயலாளர்கள் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வருவதும் தெரியவருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கட்சியை கைப்பற்றும் வேலைகளில் சசிகலா தீவிரம் காட்டி வருகிறார்.
முதலில் தொண்டர்கள் ஆதரவை தன்வசப்படுத்தும் வகையில் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்திற்கு திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் அதிமுக தொண்டர்களிடம் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அக்கட்சிக்கு தலைமைக்கு நெருக்கடியை அளித்து வருகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட நபர்களை களையெடுக்கும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி சசிகலாவிற்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றே சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் சசிகலாவால் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படுமோ என்று எடப்பாடி தரப்பு கலக்கத்தில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment