திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கொரோனா நிவாராணம் ரூ.4000, ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களை தொடங்கும் கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார். இதையடுத்து, கடந்த 8 ஆம் தேதி முதல் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பயணச்சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதில், மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள் பயணம் மேற்கொண்டு வருவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு சிக்கல்களும், முறைகேடுகளும் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அந்த வகையில், பெண்களுக்கான இலவச டிக்கெட்டில் மோசடி செய்த பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் ரயில் நிலையத்திலிருந்து பழைய பஸ் ஸ்டாண்டு செல்லும் அரசு பேருந்தில் வட மாநிலத்தை சேர்ந்த 26 பேர் ஏறியுள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை கொடுத்து அப்பேருந்தின் நடத்துநர் பணம் வசூலித்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், ஐந்து ரோடு அருகே அந்த பேருந்து வந்தபோது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது வடமாநில ஆண்களிடம் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை ஆண் பயணிகளுக்கு கொடுத்து முறைகேடாக கட்டணம் வசூலித்த நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment