கொரோனா உயிரிழப்புகளை பா.ஜ.க., அரசு மறைக்கிறது - முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு
உத்தர பிரதேச மாநிலத்தில், கொரோனா உயிரிழப்புகளை பாரதிய ஜனதா அரசு மறைத்து காட்டுவதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பா.ஜ.க., முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எண்ணத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில், லக்னோவில், சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
உத்தர பிரதேச மாநிலத்தில், கொரோனா உயிரிழப்புகளை பாரதிய ஜனதா அரசு மறைத்து காட்டுகிறது. மாநில அரசு தரும் தகவல்கள் திருப்திகரமாக இல்லை. பொது மக்களுக்கு உதவும் எண்ணத்தில் பா.ஜ.க. அரசு செயல்படவில்லை.
பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். எதிர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment