"மேகதாது அணையை கட்டியே தீருவோம்" - ஸ்டாலினை சீண்டும் எடியூரப்பா
யார் தடுத்தாலும் மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என, கர்நாடக மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது என்ற பகுதியில் அணையை கட்டும் முயற்சியில் கர்நாடக மாநில அரசு இறங்கி உள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிடும்படி, கர்நாடக மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவுக்கு, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு கடிதம் எழுதி இருந்தார்.
இதை அடுத்து, மேகதாது அணைக் கட்டுவதால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், இதனால், இரண்டு மாநிலங்களுக்குமே பயன் உண்டு என்றும், எனவே, மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, கர்நாடக மாநில முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பா அண்மையில் கடிதம் எழுதினார்.
இதற்கு பதில் கடிதம் எழுதிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது எனக் கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, டெல்லியில் இன்று, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்த தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என கோரிக்கை மனு அளித்தார்.
தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க மாட்டோம் என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதி அளித்திருப்பதாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment