லியோனி பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

லியோனி பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்

லியோனி பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்


அரசியல் மேடைகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் நடந்துவந்த அரசியல் சொற்போர் சமூக ஊடகங்களுக்கு இடம்பெயர்ந்து பல ஆண்டுகள் ஆகின்றன. கொரோனா பொதுமுடக்கம் காரணமாகக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பலரும் சமூக ஊடகத்திலேயே வாசம் செய்வதால் இந்தப் போக்கு அதிகரித்திருக்கிறது. அரசியல் யுத்தங்கள் ஒப்போதெல்லாம் சமூக ஊடகங்களையே மையம் கொண்டிருக்கின்றன. பட்டிமன்றப் பேச்சாளரான திண்டுக்கல் ஐ. லியோனி தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்த சர்ச்சையும் சமூக ஊடகங்கள் வாயிலாகவே தொடங்கி நடந்துவருகிறது.
பதவிக்கே அவமதிப்பு?

லியோனியின் நியமனத்திற்குப் பாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்திப் பேசுவதையே லியோனி பிழைப்பாகக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

“பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்?” என்று கேட்கும் அன்புமணி, “திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த காலப் பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள்” என்று சொல்கிறார். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கிவிட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும் என்றும் அன்புமணி கூறியுள்ளார்.



எதிர்க்கட்சி முகாமைச் சேர்ந்த ஒருவரின் விமர்சனம் என்று இதை ஒதுக்கிவிட முடியாது. லியோனி பட்டிமன்றங்களிலும் அரசியல் மேடைகளிலும் நகைச்சுவை என்னும் பெயரால் பெண்களை இழிவுபடுத்திப் பேசக்கூடியவர் என்பதில் ஐயமில்லை. குறிப்பாகப் பெண்களின் உடலமைப்பு, உடை ஆகியவை பற்றி மிகவும் மோசமாக அவர் பேசிய பேச்சுக்களின் காணொலிகள் இணையத்தில் இருக்கின்றன. அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசிய அத்தகையதொரு பேச்சு பரவலாகக் கண்டனங்களைப் பெற்றது. அவர் யாரை ஆதரித்து அந்தக் கூட்டத்தில் பேசினாரோ அந்த வேட்பாளரே (திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதி) அந்தப் பேச்சுக்குப் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டியதாயிற்று.

பெண்களை இழிவுபடுத்தும் வழக்கம்


லியோனி இப்படிப் பேசுவது புதிதல்ல. பட்டிமன்றங்களின் ஆகிவந்த வழக்கப்படிப் பெண்களை இழிவுபடுத்தும் ஜோக்குகளை அவர் அள்ளிவிடுவார். மேற்படிப் பிரச்சாரக் கூட்டத்தில் பெண்களின் உடலமைப்பு குறித்துப் பேசியது சர்ச்சையானது. ஆனால், அதே கூட்டத்தில் ஒரு மூதாட்டியைக் குறித்து அவர் பேசியது கவனிக்கப்படாமல் போயிற்று. அதுவும் நாகரிகமற்ற முறையில் பெண்களைக் குறிப்பிடும் பேச்சுதான். எனவே, லியோனியைப் பற்றி அன்புமணி இத்தகைய ஆட்சேபத்தை முன்வைப்பதிலும் சமூக வலைதளங்களில் பலரும் லியோனியின் பேச்சுக்களை விமர்சிப்பதிலும் வியப்பில்லை.

அதே சமயம் லியோனிக்கு ஆதரவான குரல்களும் சமூக வலைதளங்களில் எழுகின்றன. “தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராகத் திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளர், திமுக பேச்சாளர் என்ற பிம்பத்தின் மீதான பொதுப்புத்தி வன்மத்துடன் சிலர் இதைக் கிண்டல் செய்கிறார்கள். லியோனி அடிப்படையில் ஓர் அறிவியல் ஆசிரியர். பல ஆண்டுகாலம் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தவர். எழுத்தறிவைப் பரப்பும் அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்டபோது அதைத் திண்டுக்கல்லின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டுசேர்த்தவர். அவரைவிட இந்தப் பதவிக்குத் தகுதியானவர் யார்?” என்று கேட்கிறார் எழுத்தாளர் சுபகுணராஜன்.



லியோனியின் பேச்சில் இருக்கும் சாதிமறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடும் சுபகுணராஜன், “ஒடுக்கப்பட்ட பின்னணியில் பிறந்து மக்கள் மொழியில் முற்போக்குக் கருத்துகளைப் பேசிய ஓர் அறிவியல் ஆசிரியர். இவர் பொருத்தமில்லாதவர் என்பவர்கள் அறியாமையால் பீடித்தவர்கள்” என்கிறார். பெண்களைப் பற்றி ஆட்சேபத்திற்குரிய முறையில் லியோனி பேசியது குறித்து சுபகுணராஜன் எதுவும் சொல்லவில்லை.

திண்டுக்கல் லியோனி அன்புமணியின் கருத்துக்கு பதில் சொல்லியிருக்கிறார். பெண்களை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறியதற்குத் தான் பல முறை கருத்து கூறியுள்ளதாகவும், முன்னாள் முதலமைச்சரையும் அன்புமணி ராமதாஸ் இழிவாக பேசியுள்ளதாகவும், அதை ஒப்பிடுகையில் இந்த கருத்து பெரியது அல்ல என்றும் லியோனி கூறினார்.



லியோனி செய்ய வேண்டியது என்ன?

நகைச்சுவை என்னும் பெயரால் பெண்கள் இழிவுபடுத்தப்படுவது இயல்பாக உள்ள நமது சமுதாயத்தில் லியோனியை மட்டும் தனிமைப்படுத்திப் பார்க்க முடியாது. அவருடைய இத்தகைய பேச்சுக்களை மட்டும் வைத்துக்கொண்டு அவருடைய ஆசிரியப் பணி, அறிவொளி இயக்கத்திற்கு அவர் அளித்த பங்கு ஆகியவற்றைக் குறைத்து மதிப்பிடுவதிலும் நியாயம் இல்லை. ஆனால் ஆசிரியராகவும் அறிவொளி இயக்கச் செயல்பாட்டாளராகவும் இருந்த ஒருவர் பெண்கள் விஷயத்தில் எத்தகைய கண்ணோட்டம் கொண்டிருக்கிறார் என்பதும் முக்கியமானதுதான்.

வெறும் நகைச்சுவைப் பேச்சு என்றும் மேடைப்பேச்சை சுவாரஸ்யமாக்கும் உத்தி என்றோ இதை அலட்சியப்படுத்திவிட முடியாது. பாலினச் சமத்துவம் என்பது முற்போக்குக் கண்ணோட்டத்தில் முக்கியமானதொரு பகுதி. பொது வெளியில் புழங்கும் சில சொற்களுக்குப் பின்னால் சாதி, மதம், பாலினம் சார்ந்த இழிவான கண்ணோட்டம் இருப்பதை உணர்ந்து அவற்றைக் கவனமாகத் தவிர்க்க வேண்டியதும் முற்போக்காளரின் முக்கியமான கடமை. தான் தவிர்ப்பது மட்டுமின்றிப் பிறரும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வலியுறுத்தலை மேற்கொள்ள வேண்டிய கடமையும் முற்போக்காளருக்கு இருக்கிறது.



முற்போக்காளராகக் கருதப்படும் லியோனி, பெண் இழிவுப் பேச்சுக்களை நகைச்சுவை என்ற பெயரால் கடைபரப்புவது நிச்சயம் விரும்பத்தக்கதல்ல. ஆசிரியர், முற்போக்குச் செயல்பாட்டாளர் என்ற முறையில் இத்தகைய பேச்சுக்களால் பெண்களின் மனம் புண்படக்கூடும் என்பது குறித்த பிரக்ஞை அவருக்கு இருந்தாக வேண்டும். அது இல்லை என்பது மட்டுமல்ல, அதைப் பற்றிக் கவலையேபடாமல் தொடர்ந்து அவர் அப்படிப் பேசிவருவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய போக்கு கொண்டவர் பாட நூல் உருவாக்கத்தில் பங்குபெறுவார் என்றால் அது குறித்து எதிர்ப்பு எழுவது இயல்புதான். பாடநூல்களில் சாதி, மதம், நிறம், பாலினம் ஆகியவை குறித்த பழமைவாதக் கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றை நீக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இத்தகைய பேச்சுக்களுக்குப் பேர்போனவராக இருப்பது ஆரோக்கியமானதல்ல.


பாலினச் சமத்துவம், பாலினம்சார் நுண்ணுணர்வு, இழிவுபடுத்தலின் மாறுபட்ட பரிமாணங்கள் ஆகியவை குறித்து லியோனி ஆழமாகச் சிந்திக்க வேண்டும். பெண்களின் நிலையிலிருந்து இத்தகைய பேச்சுக்களை நோக்க அவர் முயற்சி செய்ய வேண்டும். பெண்களை இழிவுபடுத்திப் பேசிவந்ததற்காக வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். நியாயப்படுத்தும் முனைப்பு எதுவும் இன்றி, அத்தகைய பேச்சுக்களால் புண்பட்டிருக்கக்கூடிய பெண்களை மனதில் கொண்டு இதை அவர் செய்யலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad