12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை - ராமதாஸ் கோரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 23, 2021

12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை - ராமதாஸ் கோரிக்கை!

12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை - ராமதாஸ் கோரிக்கை!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ஆம் கல்வியாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக கடந்த 12-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடிகளை செய்ததாகக் கூறி, மராட்டிய மாநிலம் நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி மற்றும் கல்வி வழிகாட்டுதல் நிறுவனம் மீது நடுவண் புலனாய்வுப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர். ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால் மாணவர்களுக்கு மாற்றாக வேறு ஆட்களை நீட் எழுத வைத்து, நாட்டின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி தில்லியிலும், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் 5 மாணவர்களுக்கு பதிலாக வேறு ஆட்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்தது என்பது தான் அந்த நிறுவனம் மீது கூறப்படும் குற்றச்சாட்டு ஆகும். இதற்காக பல வழிகளில், பல்வேறு நிலைகளில் போலிச் சான்றிதழ், போலி அடையாள அட்டை உள்ளிட்ட மோசடிகள் நடந்துள்ளன.

இந்தியாவில் 2010-ஆம் ஆண்டில் நீட் கொண்டு வரப்பட்ட போது அதற்காக கூறப்பட்ட காரணங்களில் மிகவும் முக்கியமானது மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவது, மருத்துவக் கல்வியில் வணிக நோக்கத்தை ஒழிப்பது ஆகியவை தான். நீட் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கையில் மோசடி தடுக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, நீட் தேர்விலேயே தொடர் மோசடிகள் நடைபெற்று வருவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இத்தகைய மோசடிகள் நீட் தேர்வு மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகளின் மீதான மாணவர்களின் நம்பிக்கையை முற்றாக தகர்த்து விட்டன.

நீட் தேர்வில் முறைகேடுகளும், மோசடிகளும் நடப்பது இது முதல்முறையல்ல. நடப்பாண்டிற்கான நீட் தேர்வு வினாத்தாள்கள் ஜெய்ப்பூரில் ரூ.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களிலும் நீட் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே கசிந்துள்ளன. அதேபோல், ஆள் மாறாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் நீட் தேர்வில் 10 மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் படித்த அவர்கள் பெயரில் பிகார் உள்ளிட்ட வட மாநில மையங்களில் வேறு ஆட்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதற்காக ஒவ்வொருவர் சார்பிலும் ரூ.25 லட்சம் கையூட்டு தரப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதப்பட்டு, அதன் முடிவுகள் வெளியாகி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வரை இந்த மோசடி கண்டுபிடிக்கப்படவில்லை. தேனி மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் மோசடியாக சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் இந்த மோசடி வெளியில் வந்தது. 2018-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் இதே வழியில் சேர்ந்தது இரு ஆண்டுகள் கழித்து தான் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களைப் போல மோசடியாக மாணவர் சேர்க்கை இடத்தைக் கைப்பற்றி இன்னும் எத்தனைப் பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

நீட் தேர்வு மோசடிகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை என்பது இன்னுமொரு வேதனை ஆகும். தமிழ்நாட்டில் நடைபெற்ற நீட் ஆள்மாறாட்ட மோசடியில் உண்மையான மாணவர்களுக்கு பதிலியாக தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட பிறகும் கூட அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது கூட தில்லி, ராஞ்சியில் ஆள் மாறாட்டம் செய்தவர்கள் யார்? என்ற விவரம் வெளியிடப்படவில்லை. பதிலியாக தேர்வு எழுதவிருந்தவர்கள் தேர்வுக்கே வரவில்லை என்று கூறப்படுகிறது. இது அவர்களை காப்பாற்றும் முயற்சியா? என்பது தெரியவில்லை. நீட் மோசடி செய்பவர்களுக்கு அசைக்க முடியாத ஆதரவு இருக்கிறது என்பதையே இந்த தகவல்கள் காட்டுகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad