இரவோடு இரவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்: 450 ரவுடிகள் கைது!
தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 15க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாக ஊர், பெயர் வாரியாக பட்டியலிட்டுள்ளார்.
ஒரு மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில், அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்.
மாறாக, சட்டம்- ஒழுங்குப் பிரச்சினைகளால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு இடம் இருக்காது என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நேற்று இரவு திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்தியில், “தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் நேற்று இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு ஓரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம் 870 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மொத்தம் 450 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 181 நபர்கள் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியானையின் படி கைதானார்கள்;.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 250 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 420 நபர்களிடமிருந்து நன்னடத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டுள்ளது. கொலை குற்றங்களில் ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment