இன்று பள்ளிகளுக்கு விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 24, 2021

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. ஆனால் தொகுதி மறுவரையறை செய்யவில்லை என்று கூறி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த ஒன்பது மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1,381 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், 2,901 ஊராட்சித் தலைவர்,


ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள்

22,581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 27,003 பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். நேற்றைய தினம் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ள நாளைய தினம் கடைசி நாள் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று (செப்டம்பர் 24) நடைபெறவுள்ளன.

9-12ஆம் வகுப்பிற்கு விடுமுறை

இதில் அரசு, தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அறிவித்துள்ளார். இதேபோல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சியை ஒட்டி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர். கொரோனா பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

புகார் அளிக்க சிறப்பு ஏற்பாடு


உரிய தடுப்பு நடவடிக்கைகளுடன் வகுப்பறைகளில் 50 சதவீத பேர் வீதம் சுழற்சி முறையில் மாணவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அடுத்தகட்டமாக 6-8ஆம் வகுப்பு வரை மாணவர்களை வரவழைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் புகார்கள் தொடர்பாக திமுக தலைமையிடம் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊரக உள்ளாட்சி தேர்தல் செயல்பாடுகளுக்கு அண்ணா அறிவாலயத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் இடங்களில் இருந்து வரும் புகார்கள், தகவல்களை கட்சியிடம் உடனுக்குடன் தெரிவிக்க விரும்பும் கட்சியினருக்காக இரண்டு செல்லிடப்பேசி எண்கள் தரப்பட்டுள்ளன. அதன்படி, 8838809244, 8838809285 ஆகிய எண்களின் மூலமாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad