இந்திய மக்களின் வாழ்நாளில் 9 ஆண்டுகள் குறையும் அபாயம்: என்ன செய்ய போகிறது அரசு?
சிகரெட் பிடிப்பதோ அல்லது காசநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற வியாதிகளை விட
காற்று மாசுபாடு மனித ஆயுளை வெகுவாகக் குறைக்கிறது என AQLI மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்பொழுது நிலவிவரும் காற்று மாசின் அளவுகள் அப்படியே தொடர்ந்தால், ஏற்கனவே மோசமான காற்று மாசுபாட்டில் உள்ள இந்தியப் பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளில் 9 ஆண்டுகளை இழக்க நேரிடும் என்று அண்மையில்
வெளியான AQLI (Air Quality Life Index ) ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி இயற்கை பாதுகாப்பு அமைப்பான பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகள் மிக மோசமாக காற்று மாசடைந்த நாடுகளின் பட்டியலில் தொடர்ச்சியாக முதல் ஐந்து இடங்களில் உள்ளன. உலகின் மிகவும் மாசுபட்ட 40 நகரங்களின் பட்டியலில் 37 நகரங்கள் தெற்காசியப் பிராந்தியத்தில்தான் உள்ளது. குறிப்பாக இந்த மிகவும் மோசமான காற்று மாசுபட்ட நகரங்களில் 185 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஆயுட்காலத்தில் சராசரியாக 5 ஆண்டுகளை இழப்பதாகவும், உலகம் முழுவதும் காற்று மாசு காரணமாக மனித ஆயுள் சராசரியாக 2.2 ஆண்டுகள் குறைவதாகவும், டெல்லி , கொல்கத்தா போன்ற இந்திய
நகரங்களில் காற்று மாசு காரணமாக மனித ஆயுள் காலம் 9 ஆண்டுகள் வரை குறைவதாகவும் இந்த AQLI ஆய்வறிக்கை கூறுகிறது. இது சிகரெட் பிடித்தலை விட, காச நோய் அல்லது எயிட்ஸ் போன்ற வியாதிகளை விட அதிகமாகப் பாதிப்பாகும்.
காற்றிலிருக்கும் நச்சு வாயுக்களைக் காட்டிலும் நுண் துகள்களை சுவாசிப்பத்தன்மூலமே மக்களின் ஆயுள் காலம் குறைவதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. காற்றில் நுண்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது அனல் மின் நிலையங்கள் மற்றும் வாகனப் புகை, என்ற அடிப்படையில் இந்த காற்று மாசினால் ஏற்படும் உயிரிழப்புகள், புதைப்படிம எரிபொருள் பயன்பாட்டினால் உந்தப்படும் ஒரு பேராபத்தாக தான் கருதப்பட வேண்டும்.
இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் காற்றில் நுண்துகள்களின் பெருக்கம் அபாயகரமான அளவுகளில் நாடு முழுவதும் பரவலாக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் உள்ள 480 மில்லியன் மக்கள் உலகத்தில் பிற இடங்களில் இருப்பதைக் காட்டிலும் பத்து மடங்கு அதிக மாசடைந்த காற்றை சுவாசிக்கிறார்கள்.
வட இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல் தற்பொழுது மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் மக்களும் தற்பொழுது நுண்துகள் காற்று மாசின் பேராபத்தால் தங்களில் வாழ்நாளில் 2.2 முதல் 2.9 வருடங்களை இழக்கிறார்கள் என்று இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
இது நுண்துகள் அளவுகள் பல மடங்கு அதிகரித்துக் காணப்படும் சென்னைப் போன்ற தமிழக நகரங்களுக்கும் சேர்த்தே விடப்பட்டிருக்கும் எச்சரிக்கை ஆகும்.
இந்திய காற்று தர நிர்ணய அளவீட்டின் படி காற்றில் நுண்துகளின் அளவு 60 µg/m3 க்கு உள்ளாக இருத்தல் வேண்டும். இதுவே உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) காற்று தர நிர்ணய அளவீட்டின் படி 25 µg/m3 க்கு உள்ளாக இருத்தல் வேண்டும். ஆனால் சென்னையின் பல பகுதிகளில் நுண் துகளின் அளவு 60 µg/m3 அளவை விட அதிகமாக உள்ளதாக Health Energy Initiative நடத்திய ஆய்வின் முடிவில் நமக்கு தெரிகிறது.
குறிப்பாக திருவொற்றியூர், காசிமேடு, மீஞ்சூர், கொடுங்கையூர், வல்லூர், எண்ணூர், மணலி, அம்பத்தூர், தி.நகர், வேளச்சேரி, ஆகியப் பகுதிகளில் இந்த ஆய்வின் பொழுது நுண்துகள் 60 µg/m3 முதல் 128 µg/m3 வரை இருந்துள்ளன. அதே போல் பாரிமுனை , வியாசர்பாடி போன்ற பகுதிகளில் நுண்துகளில் அளவு 176 µg/m3 முதல் 228 µg/m3 வரை பதிவாகியுள்ளது.
சென்னையின் காற்றின் தரம் இப்படி இருக்கையில், நுண்துகளின் அளவை உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 25 µg/m3 அளவுக்கு குறைத்தால் தற்பொழுது இருப்பதை விட மனித ஆயுளை 5 ஆண்டுகள் அதிகரிக்கலாம் என்று AQLI அறிக்கை வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment