சிறப்பு ரயில் சேவையில் மாற்றமா? தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அப்போது பொதுப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் சரக்கு போக்குவரத்து, சிறப்பு
ரயில் சேவை என படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. தொடக்கத்தில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு முன்பதிவு இல்லாத பாசஞ்சர் ரயில்களும் படிப்படியாக அனுமதிக்கப்பட்டன.
சிறப்பு ரயில் சேவை
தற்போது பெரும்பாலான வழக்கமாக இயங்கும் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தமிழகத்திலும் ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அதேசமயம் சிறப்பு ரயில்களின் சேவை முழுவதுமாக நிறுத்தப்படவில்லை. பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள்
அதாவது, 02606 என்ற எண் கொண்ட காரைக்குடி - சென்னை எழும்பூர்
மற்றும் 12635 என்ற எண் கொண்ட சென்னை எழும்பூர் - மதுரை இடையிலான சிறப்பு ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கல்பட்டு மற்றும் சென்னை எழும்பூர் இடையே வரும் 29ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்ததால் மேற்குறிப்பிட்ட இரண்டு ரயில்களும் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதியளவு ரத்து அறிவிப்பு
இதேபோல் 06627 என்ற எண் கொண்ட சென்னை சென்ட்ரல் - மங்களூர் சிறப்பு ரயில் வரும் 28ஆம் தேதி சென்ட்ரல் மற்றும் ஜோலார்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயிலும் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 03351 என்ற எண் கொண்ட தன்பாத் - ஆலப்புழா சிறப்பு ரயில் வரும் 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் நிற்காது என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment