முடிவுக்கு வந்தது போர்..! விரைவில் தலிபான் ஆட்சி - பதவி ஏற்பு விழாவுக்கு சீனா, பாகிஸ்தானுக்கு அழைப்பு?
ஆப்கானிஸ்தானில், பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றி உள்ளதாகத் தெரிவித்துள்ள தலிபான்கள், போர் முடிவுக்கு வந்துள்ளதாகவும், விரைவில் புதிய அரசு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில்,
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், புதிய அரசு அமைக்கும் பணியில் தலிபான்கள் படு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சி அமைக்கும் விவகாரத்தை கையாள தனிக் குழுவை தலிபான்கள் நியமித்துள்ளதாகத் தெரிகிறது.
ஆப்கானிஸ்தானில், தலிபான் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் தலைமையில் புதிய அரசு அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலிபான் உயர் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா தலைமையில் தான் அதிபர் செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றினாலும், பஞ்ச்ஷிர் மாகாணத்தை அவர்களால் கைப்பற்ற முடியாமல் இருந்தது.
தலிபான்களுக்கு எதிரான போராளிகள் குழு அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. இரு தரப்புக்கு இடையே நடந்த சண்டையில், 700க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இன்று, பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே பஞ்ச்ஷிர் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றவில்லை என போராளிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment