உங்க லட்சணம் தெரியாதா? எடப்பாடியை கப்-சிப் ஆக்கிய ஸ்டாலின்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

உங்க லட்சணம் தெரியாதா? எடப்பாடியை கப்-சிப் ஆக்கிய ஸ்டாலின்!

உங்க லட்சணம் தெரியாதா? எடப்பாடியை கப்-சிப் ஆக்கிய ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, சட்ட ஒழுங்கு, தீயணைப்பு மீட்பு பணிகள் மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்
எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை நேரடி ஒளிபரப்பு மற்றும் காவலர்களுக்கு வீடு திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் முழுமையாகப் பேசி, அதை நான் முழுமையாகக் குறிப்பெடுத்துக் கொண்டு, பதிலுரை ஆற்றுகிறபோது, அவற்றிற்கெல்லாம் விளக்கமாக சொல்கிறேன். ஆனால், நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி குறித்துச் சொன்னார். அதற்கு மட்டும் பதிலளிக்கிறேன் என்றார்.

இதுகுறித்து ஸ்டாலின் பேசியதாவது: “நாங்கள் ஒரு முறை அல்ல - பல ஆண்டு காலமாகத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோம். 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த நீங்கள், அதைச் செய்யவில்லை. ஆனால், தேர்தல் அறிக்கையிலே நாங்கள் சொல்லியிருக்கிறோம். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான், அந்த முயற்சியிலே இன்றைக்கு இறங்க முடியவில்லை. நிச்சயமாக, உறுதியாக சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கக்கூடிய நம்முடைய சட்டப்பேரவையில் கூட்டத் தொடர் நடைபெறுகிற போது, நிச்சயமாக நேரடியாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவோம்” என்றார்.

உங்கள் சொந்த இல்லத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, நாங்கள் கொண்டு வந்து நிறைவேற்றினோம்; அதைத் தொடர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “உண்மை நிலை என்னவென்று கேட்டால், எங்களிடம் கேட்பதைவிட, காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டால் தெரியும், அதன் லட்சணம் என்னவென்று. இத்திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடுகள் எல்லாம் தரமற்றவையாக இருக்கின்றன.

போதிய அடிப்படை வசதிகள் இல்லை. விண்ணப்பங்கள் செய்தும், முன்பணம் செலுத்தியும், வெகு நாட்களாகக் காத்திருக்க வேண்டிய ஒரு நிலை இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அதில் விண்ணப்பித்தவர்கள் பல பேர் ஓய்வு பெற்றுச் சென்று விட்டார்கள். இதுதான் இருக்கக்கூடிய சூழ்நிலை. ஆனாலும், இந்த அரசைப் பொறுத்தவரைக்கும், நீங்கள் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக நாங்கள் அதைக்கைவிட மாட்டோம். அதை இன்னும் சிறப்பாக, காவலர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலே அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம்” என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad