Sasikala: சசிகலாவுக்கு கிடைத்ததா டெல்லி சிக்னல்? ஓ இதுதான் காரணமா?
சசிகலா அதிமுகவை கைப்பற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் அவரது சொத்துகள் முடக்கம், அவருக்கு எதிரான வழக்கு விசாரணை வேகமெடுத்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுக்குள் மீண்டும் நுழைய நாள் பார்த்து வந்த சசிகலாவுக்கு திரும்பும் பக்கமெல்லாம் முட்டுக்கட்டைகளாக உள்ளன. தேர்தலுக்கு முன்பாக அரசியிலிலிருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக அறிவித்தார் சசிகலா. தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து ஆட்சியை இழந்த பின்னர் மீண்டும் அரசியலுக்கு எண்ட்ரி கொடுக்கும் விதமாக அதிமுக தொண்டர்கள்,
நிர்வாகிகளுடன் அலைபேசியில் பேசி அதன் ஆடியோவை வெளியிட்டு வந்தார்.
தொலைக்காட்சிகளில் தோன்றி நேர்காணல் அளித்தார். இதன்மூலம் மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் வேலையை பார்க்கத் தொடங்கினார் சசிகலா. சிறையிலிருந்து வெளியே வந்ததும் தன்னை வந்து வரிசைகட்டி சந்திப்பார்கள் என நினைத்துக் கொண்டிருந்த சசிகலாவுக்கு அப்படியான சம்பவங்கள் நடைபெறாதது வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் இம்முறை அவரே சென்று சந்திக்கும் எண்ணத்துக்கு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுசூதனனை சந்திக்கச் சென்றார். பின்னர் அவரது மறைவுக்கும் சென்றார். ஓபிஎஸ் மனைவியின் மரணத்தையோட்டி மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார்.
மதுசூதனன், ஓபிஎஸ் இருவரும் தனக்கு எதிராக பேசி வந்தவர்கள் என்றாலும் அரசியல் நாகரீகம் கருதி சசிகலா சென்று சந்தித்தார் என்று கூறப்பட்டது. ஆனால் சசிகலாவின் அணுகுமுறையில் ஏற்பட்ட பெரிய மாற்றம் இது என்கிறார்கள் அவரது நடவடிக்கைகளை பல ஆண்டுகளாய் கவனித்து வந்தவர்கள். எடப்பாடி பழனிசாமியும் அவரைச் சுற்றியவர்களும் மட்டுமே சசிகலாவுக்கு எதிராக நிற்பதாகவும் அதனால் அவர்களைத் தவிர மீதமிருப்பவர்களிடம்
ராசியாகிவிடுவது என்ற முடிவுக்கு சசிகலா வந்துவிட்டார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தென் மாவட்டங்களில் தற்போதும் சசிகலாவுக்கு செல்வாக்கு சரிந்துவிடவில்லை. கொங்கு பகுதிகளிலும் தனக்கான ஆதரவு வட்டத்தை உருவாக்க முக்கிய பிரமுகர் ஒருவர் மூலம் கொங்கு பகுதி தொழிலதிபர்கள் சிலரிடமும் சசிகலா தரப்பு பேசிவருகிறது என்கிறார்கள். அதே நேரத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு வெளியே வந்து எடப்பாடி பழனிசாமியை கலவரப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment