வருகிறது மினி லாக்டவுன்.. மாநில அரசு தடாலடி!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மினி லாக்டவுன் கட்டுப்பாடுகளை அமல்படுத்திய குஜராத்.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் குஜராத் மாநிலத்தில் மினி லாக்டவுன் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குஜராத் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில் 10 நகரங்களில் இரவு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, குஜராத்தில் உள்ள அகமதாபாத், ஆனந்த், பாவ்நகர், காந்திநகர், ஜாம்நகர், நாதியாத், ராஜ்கோட், சூரத், வதோதரா ஆகிய 10 நகரங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அரசியல் கூட்டங்கள், சமூக நிகழ்வுகள், திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 400 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். உள்ளரங்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே அதிகபட்சம் அனுமதிக்கப்படுவார்கள். துக்க நிகழ்வுகளில் 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
கடைகள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால், ஹோட்டல்கள், உணவகங்கள், ஸ்பா போன்றவை இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அரசு மற்றும் தனியார் ஏசி பேருந்துகள் 75% பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படும்.
திரையரங்குகள், ஜிம், நீச்சல் குளங்கள், நூலகங்கள் 50% பேருடன் செயல்பட அனுமதிக்கப்படும். மேலும், பள்ளிகள் உள்ளிட்ட எல்லா கல்வி நிறுவனங்களும் ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment