பெண்களின் உரிமைகளைக் காக்குமா நீதிமன்றம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 7, 2022

பெண்களின் உரிமைகளைக் காக்குமா நீதிமன்றம்?

பெண்களின் உரிமைகளைக் காக்குமா நீதிமன்றம்?



இரவு 11 மணி. நாள் முழுவதுமான களைப்பைக் கழுவித் துடைத்துக்கொண்டு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக ஒரு குளியல் போடுவதற்காக அவள் குளியலறைக்குள் செல்கிறாள். தன் வீட்டுக் குளியலறையில் பத்திரமாகக் கதவுகளைத் தாழிட்டுக்கொண்டு அவள் குளித்துக் கொண்டிருப்பதை சின்ன ஜன்னல் துவாரம் வழியாக கேமரா வைத்து வீட்டுக்கு வெளியிலிருந்து ஒருவன் வீடியோ எடுக்கிறான். சற்று நேரத்திற்குள்ளாக அவள் கண்ணில் அந்தக் கைபேசிக் கேமரா அகப்படுகின்றது. அவள் கணவன் பாய்ந்து துரத்தி ஓடி அவனைக் கையோடு பிடிக்கவில்லை என்றாலும் ஆளை அடையாளம் கண்டாயிற்று.

அவள் குளிப்பது, டவலை உடலில் சுற்றிக்கொண்டு கதவைத் தட்டிக்கொண்டிருந்த கணவனுக்காகக் கதவைத் திறந்து விடுவதென்று கச்சிதமாகப் பதிவாகியிருந்த காட்சியைப் பார்த்து அவர்களுக்குச் சீற்றம் தாங்கவில்லை. “இதை இப்படியே விடக் கூடாது, போலீஸில் பிடித்துக் கொடுக்க வேண்டும்” என்று மனைவியும் கணவனும் ஒருவரையொருவர் சமாதானப்படுத்திக் கொண்டு போலீஸ் நிலையம் செல்கிறார்கள்.

போலீஸ் வழக்கத்திற்கு மாறாக விரைவாகச் செயற்பட்டு அவர்கள் அடையாளம் காண்பித்த நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. வழக்குப் பதிவாகிறது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை. குற்றம் சாட்டப்பட்ட நபர் சார்பாகவும் ஒரு சட்டத்தரணி (வழக்கறிஞர்) ஆஜராகுவார்தானே!

வந்து என்ன சொல்கிறார்?

“யுவரானர், இந்தப் பெண் ஒன்றும் ஒழுக்கமானவளில்லை. இதோ அவள் முகநூலைப் பாருங்கள், இன்ஸ்டாகிராமைப் பாருங்கள். எவ்வளவு போட்டோக்களைப் பதிவேற்றிருக்கிறாள். இவள் ஒழுக்கமான ஹோம்லியான பெண்ணாக இருந்திருந்தால் இப்படியொரு காரியம் நடந்திருக்குமா?”

இது நான் கற்பனையில் எழுதிக் கொண்டிருக்கும் கதையில்லை. நிஜமாகவே திருகோணமலையில் நடந்த சம்பவம். வழக்கு இன்று (ஜனவரி 7) 14 நாட்களின் பின் மீண்டும் இரண்டாவது விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு இந்நேரம் வந்திருக்கும்!

ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்ததை ஒருவன் அத்துமீறி வீடியோ எடுத்த குற்றத்தை அவள் முகநூலில் போட்டோ போடுகிறவள் என்பதைக் காரணம் காட்டி நியாயப்படுத்தி வாதிடுவதற்குச் சட்டம் பயின்று கறுப்புக் காவியைத் தூக்கிப் போட்டுக்கொண்டு காசுக்கு வாந்தியெடுக்கப் போவதற்குப் பதிலாக பெட்டா மார்க்கட்டில் வெற்றிலை பாக்கு விற்றுப் பிழைத்திருக்கலாம். ஒன்றும் குறைந்திருக்காது!

ஒரு பாலியல் தொழிலாளி வீட்டுக் குளியலறையில் காமிராவை வைத்திருந்தாலும் குற்றமே என்று வாதிடுவதற்குத்தான் இங்கு சட்டம் பயின்றவர்கள் தேவை. இதுபோன்ற ஆணாதிக்கக் கட்டுப்பெட்டித்தனங்களைக் கட்டிக்காப்பதற்காகப் பெற்றோர் உழைத்துச் சேமித்த காசில் சட்டம் படிப்பதற்கு கொஞ்சம் மண்ணெண்ணெய் குடித்துச் சாகலாம்.

இந்தக் காமிரா அகப்படாமல் போயிருந்தால் அவன் என்ன செய்திருப்பான்? அதை வைத்து அவளை மிரட்டி பணம் கேட்டிருப்பான். அவள் வாழ்வின் எச்சமுள்ள நிம்மதியை இழந்து அல்லாடச் செய்திருப்பான். பாலுறவுக்கு அழைத்திருப்பான். வல்லுறவு செய்திருக்கவும் முயன்றிருப்பான். சமூக வலைத்தளங்களில் அவளின் நிர்வாணக் குளியல் காட்சியை ஓடவிட்டு, நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு இங்கே காய்ந்துகிடக்கும் வாழைப்பழங்களுக்குக் கொஞ்சம் எண்ணெய் ஊற்றியிருப்பான்.

இப்பேர்ப்பட்ட ஒருவன் செய்த காரியத்தை நியாப்படுத்துவதற்கு ஒரு சட்டத்தரணி ஆஜராகுவதே படுகேவலம். அவன் பிடிபட்ட பத்து நாட்களுக்குள் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அழுது புலம்பிக்கொண்டு வெளியே தலைகாட்டுகிறார்கள். “இவன் எனக்கும் இப்படித்தான் செய்தான், உங்களுக்கு வந்த தைரியம் எங்களுக்கு வரவில்லை” என்று.

எப்படி தைரியம் வரும்? அதுதான் பெண்களின் ஒழுக்கத்தை வீட்டிலும் பள்ளியிலும் பல்கலைக்கழகங்களிலும் வேலைத்தளங்களிலும் சொல்லிக் கொடுத்தது போதாது என்று நீதிமன்றங்களிலும் வழக்காடக் கிளம்பியிருக்கிறார்களே, எப்படி தைரியம் வரும்?

உரிமையும் உரிமை மீறலும்

ஆனால், திருகோணமலை நீதிமன்றம் இந்த வழக்கை நீதியான முறையில் கையாளும் என்று எதிர்பார்க்கிறோம். உரிய நபரினால் அவனது கூட்டாளிகளினாலும் இதுவரைக்கும் பல பெண்கள் அந்த ஊரில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஆதாரப்பூர்வமாகத் தெரிகிறது.

முகநூலில் ஒரு பெண் படங்கள் பதிவேற்றுவதற்கும் அவரிடம் தவறாக நடந்துகொள்ளும் ஒரு நபரின் குற்றச் செயலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. முகநூலில் படங்கள் இடுவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அத்துமீறி ஒருவரைப் படம் எடுப்பதும், வீடியோ எடுப்பதும் உரிமை மீறல். இதனை மக்களுக்குப் புரிய வைக்க நீதித்துறைக்குக் கிடைத்த அருமையான சந்தர்ப்பம் இது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பட்டுத்துணி போர்த்திப் பாதுகாக்காமல் விளக்குமாற்றால் அடித்து விரட்டுவதற்குப் பெண்களுக்கு தைரியத்தை அளிக்கும் வகையில் இந்த நீதிமன்றம் மட்டுமல்ல, எந்த நீதிமன்றமும் செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad