உ.பி. தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் - பிரியங்கா காந்தி விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 22, 2022

உ.பி. தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் - பிரியங்கா காந்தி விளக்கம்!

உ.பி. தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் - பிரியங்கா காந்தி விளக்கம்!


உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார்
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது இமேஜ் சார்ந்த விஷயம் என்பதால், அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அம்மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களை கைபற்றியது. சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த உத்தரப்பிரதேசத்தை இம்முறை மீண்டும் கைபற்றும் நோக்கில் அக்கட்சி தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இதற்காக அம்மாநிலத்தின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் மேலிடம் நியமித்து விட்டது. அவரும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.


உத்தரப்பிரதேச தேர்தல் என்றாலே ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவும். கடந்த முறை தேர்தலின் போது இதே எதிர்பார்ப்பு நிலவியது. அக்கட்சிக்கு தேர்தல் உத்தியாளராக செயல்பட்ட பிரஷாந்த் கிஷோரும் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆனால், பிரியங்கா காந்தி பிரசாரத்தோடு மட்டும் நிறுத்திக் கொண்டார்.இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால், பிரியங்கா காந்தி தேர்தலில் களம் காண்பார் என்று கூறப்படுகிறது. முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர். அப்போது, காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட கூடிய வேறு யாருடைய முகமும் உங்களுக்கு தென்பட்டதா? ஒவ்வோர் இடத்திலும் என்னுடைய முகம் இருப்பதனை நீங்கள் காணலாம் என புன்சிரிப்புடன் தெரிவித்தார். இதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்து சூசகமாக பிரியங்கா காந்தி தனது பெயரை குறிப்பிட்டுள்ளார் என்ற செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச தேர்தலில் நான் போட்டியிட்டாலும், முதல்வர் வேட்பாளராக என்னை கருத முடியாது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அடிக்கடி முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி கேட்கும்போது, இயல்பான முறையில் நான் பேசியதை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. உத்தரப்பிரதேச காங்கிரசில் பல தலைவர்கள் உள்ளனர். நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிக்குள் ஆலோசனை நடக்கிறது. அதில் எடுக்கப்படும் முடிவு முறைப்படி அறிவிக்கப்படும். அதேசமயம் நான் தேர்தலில் போட்டியிட்டாலும், முதல்வர் வேட்பாளராக அதை கருதக் கூடாது.” என்று விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad