ஆளுநர் அதிகாரம் பறிக்கப்படலாமா? பதறும் கிருஷ்ணசாமி
துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர்களின் அதிகாரங்களை பறிக்க முயற்சிக்க வேண்டாம் என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியும், “பல்வேறு மாநிலங்களில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திலும் இந்த நிலையே உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதலை அடுத்து, துணைவேந்தரை மாநில அரசே நியமித்தது கவனிக்கத்தக்கது. கேரளாவிலும் இத்தகைய பிரச்சினை எழுந்திருக்கிறது. எனவே துணைவேந்தர்கள் நியமனத்தை மாநில அரசு செய்வது தான் சிறப்பாக இருக்கும்” என்று பேசினார்.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கும் பங்கு இருக்க வேண்டும்; சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என முதல்வர் ஸ்டாலின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்போரின் உறவினர்கள் அல்லது ஜாதி மத அபிமானங்களுக்கு மட்டுமே துணைவேந்தர்கள் பதவி இருந்தது. ஆராய்ச்சியின் இருப்பிடமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழக உறுப்பு கல்லுாரி மாணவர்களுக்கு பட்டம் அளிக்கும் சாதாரண நிறுவனமாகவே குறுகி விட்டன. பல பேராசிரியர்களே பாலியல் புகார்களுக்கு ஆளாகினர்.
துணைவேந்தர்களில் பலர் வருமானத்துக்கு அதிகமாக பன்மடங்கு சொத்து சேர்த்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதவி இழந்தனர். துணைவேந்தர் நியமனங்கள் கவர்னர் முழு கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். சிறு பங்கு கூட மாநில அரசுக்கு இருக்கக்கூடாது. துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை தி.மு.க. அரசு தன் வசப்படுத்தினால் கிராமப்புற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.
'மாநில சுயாட்சி' என்ற பெயரில் துணைவேந்தர் நியமனங்களில் கவர்னர்களின் அதிகாரங்களை பறித்து பல்கலைகளை கட்சி குடும்பச் சொத்தாக மாற்ற முயற்சிக்க வேண்டாம்.அது தி.மு.க. அரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றும் பணிக்கான துவக்கமாக அமையலாம். தவறான பாதையை தேர்ந்தெடுக்காதீர்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment