தணிந்தது போர் பதற்றம்: உக்ரைன் - ரஷ்யா உரசலுக்கு என்ன காரணம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 15, 2022

தணிந்தது போர் பதற்றம்: உக்ரைன் - ரஷ்யா உரசலுக்கு என்ன காரணம்?

தணிந்தது போர் பதற்றம்: உக்ரைன் - ரஷ்யா உரசலுக்கு என்ன காரணம்?



உக்ரைனில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் போக்குக்கு என்ன காரணம் என்பது குறித்து இங்கே காணலாம்
உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பொருளாதாரம், பங்குச்சந்தை, கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் ரஷ்யா - உக்ரைன் ஆகிய இரு நாடுகள் இடையேயான மோதல் போக்குத்தான்
ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் போக்கு இன்று, நேற்று அல்ல சோவியத் யூனியன் வீழ்ச்சியின் போதிருந்தே இருந்து வருகிறது. சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்த பிறகு சோவியத் யூனியன் அமைப்பில் இருந்த மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் தனி நாடாக விடுதலையானது. ஆனால், உக்ரைனின் புவியியல் அமைப்பு ஐரோப்பாவையும், ரஷ்யாவையும் உள்ளடக்கியது. ஒரு புறத்தில் ரஷ்யாவையும் மறுபுறத்தில் ஐரோப்பிய நாடுகளையும் உக்ரைன் எல்லையாக கொண்டிருக்கிறது. உக்ரைனின் மேற்கு பகுதியில் வசிக்கும் மக்கள் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாகவும் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் இருக்கின்றனர்.

உக்ரைனில் ரஷ்யா ஆதிக்கம்

உக்ரைனின் மொழி, கலாச்சாரங்கள் பெரும்பாலும் ரஷ்யாவுடன் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. இதன் காரணமாகவே, 2014ஆம் ஆண்டு ரஷ்யா ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் மக்கள் போராட்டத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதேகாலகட்டத்தில், அதாவது 2014ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. ரஷ்யாவின் தூண்டுதலின் பேரில் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் படைகளோடு இன்றும் சண்டையிட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.


ரஷ்யாவின் பயம்

ரஷ்யாவை பொறுத்தவரை உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை அவர்கள் விரும்பவில்லை. ஆனால், உக்ரைன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றால் கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன. இதனிடையே, 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வமாக இருந்தது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, இதனை மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே கருதியது.

உக்ரைன் மட்டுமல்ல, முன்னாள் சோவியத் குடியரசின் எந்த ஓர் உறுப்பு நாட்டையும் இணைக்க முற்படக்கூடாது. இதனால் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஆபத்துள்ளது என்று ரஷ்யா தெளிவுபடுத்தியது. மேலும், தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கிரிமியா தீபகற்பம் மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயற்சி செய்வதாக ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.

உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றம்

இந்த சூழலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டதற்கு சாட்சியாக செயற்கைக்கோள் புகைப்படங்களும் வெளியாகின. இதனால், உக்ரைன் மீது எந்த நேரமும் ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவியது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு ஆதரவளிப்பது என முடிவானது. இதையடுத்து, 8,500 ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா தயார் நிலையில் வைத்தது. நேட்டோ படைகள் கிழக்கு ஐரோப்பாவில் படைகளை குவிக்க தொடங்கின. இதனால், போர் மேகங்கள் சூழ்ந்தன.

No comments:

Post a Comment

Post Top Ad