நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 14, 2022

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் 500-600 ஏக்கர் சாகுபடி பரப்புள்ள பகுதிகளில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் உள்ளிட்ட விவசாயிகள் தாக்கல் செய்த மனுவில், தங்கள் நிலங்களில் சாகுபடியாகும் நெல்லை, அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பதாகவும், ஆனால் ஊழல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் அவதிப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தில் போதுமான அளவில் கொள்முதல் நிலையங்கள் இல்லை எனவும், 3,000 ஏக்கர் பரப்பளவிற்கு ஒரு கொள்முதல் நிலையம் என்ற அளவில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஒரு மாதம் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதாலும், அதற்கு பின்னர் தனியாரிடம் விற்பதாலும் இழப்பை சந்திப்பதாகவும் அவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பை வைப்பதற்கான போதுமான கிட்டங்கிகளும் இல்லை என்றும், கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவுசெய்து விற்பனை செய்வதால் பாதிப்புக்கு உள்ளவதாகவும், இடைத்தரகர் ஒரு மூட்டைக்கு 65 ரூபாய் வரை கமிஷன் வாங்குவதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த பிப்ரவரியில் 27 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என அரசு அறிவித்தாலும், அவை முறையாக செயல்படவில்லை எனவும், அவற்றில் 26 நிலையங்கள் பள்ளி கட்டிடம், கூட்டுறவு வங்கி, நூலக கட்டிடம் ஆகியவற்றில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் போதுமான கொள்முதல் நிலையங்களை அமைக்கவும், தானியங்கி டோக்கன் நடைமுறைகளை பின்பற்றவும் உத்தரவிட்டிருந்தாலும், இதுவரை அந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதனால் 500 முதல் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில், போதுமான போக்குவரத்து வசதி, இருப்பு வைக்கும் வசதி, அடிப்படை வசதிகளுடன் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் மையத்தை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இடைத்தரகர்களை ஒழிக்கவும், அரசியல் தலையீடுகளை தடுக்கவும் உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இந்த மனு தொடர்பாக மார்ச் 29ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றய தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad