பெண் அதிகாரியின் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்றால் கல்வித்துறை அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியத்தில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாக பணியாற்றிய புனிதவதி என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக மாற்றம் செய்யப்பட்டார். தன்னை பதவி இறக்கம் செய்ததை எதிர்த்து புனிதவதி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து அவர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். பின்னர், 2008-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
பணி வரன்முறை
புனிதவதி தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அவரது கோரிக்கையை பரிசீலிக்க கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு புனிதவதி ஓய்வுபெற்றார்.
இதையடுத்து 2008-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தன்னுடைய பணியை வரன்முறை செய்ய வேண்டும் என்று தொடக்கக்கல்வி ஆணையர், அரியலூர் தலைமை கல்வி அதிகாரி ஆகியோரிடம் அவர் மனு கொடுத்தார்.
அந்த மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்காததால், ஐகோர்ட்டில் புனிதவதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.
சிறை
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் கொடுத்த மனுவை பரிசீலித்து 90 நாட்களில் உரிய உத்தரவை தொடக்கக் கல்வி ஆணையர், அரியலூர் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி ஆகியோர் பிறப்பிக்க வேண்டும்.
ஒருவேளை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்’ என்று எச்சரித்து உத்தரவிட்டுள்ளார்.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment