ரூ.10க்கு கொரோனா ஆலோசனை: மருத்துவருக்கு குவியும் பாராட்டு!
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதவிர தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், கொரோனா ஆலோசனைகளை ரூ.10க்கு வழங்கி வரும் மருத்துவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சொந்தமாக சிறிய மருத்துவமனை ஒன்ற நடத்தி வருபவர் மருத்துவர் விக்டர் இம்மானுவேல். இவர்தான் கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவையாற்றி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கொரோனாவால் பாதித்தவர்களிடம் இருந்து ரூ.10 மட்டுமே
ஆலோசனை கட்டணம் பெறுகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் ஏழ்மையாக இருந்தால், அந்த ரூ.10 கூட வாங்குவதில்லை. கொரோனா தொடர்பான பல்வேறு சோதனைகளும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. எனது பணிக்காக பல்வேறு தன்னார்வலர்களும் நிதியுதவி செய்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவை காரணம் காட்டி ஏற்கனவே செல்வம் கொழிக்கும் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்து கொள்ளை லாபம் ஈட்டு வரும் நிலையில், மருத்துவர் விக்டர் இம்மானுவேலின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா மட்டுமல்லாமல் பொதுவாகவே அவரது மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறார் மருத்துவர் விக்டர் இம்மானுவேல். அத்துடன், விவசாயிகள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், எல்லைகளில் போராடும் வீரர்கள், ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச சிகிச்சை வழங்கி வருகிறார்.
No comments:
Post a Comment