கடவுளின் தேசத்தைக் காக்க மீண்டும் சட்டமன்றம் நுழைகிறார் 'சைலஜா' டீச்சர்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 2, 2021

கடவுளின் தேசத்தைக் காக்க மீண்டும் சட்டமன்றம் நுழைகிறார் 'சைலஜா' டீச்சர்...

கடவுளின் தேசத்தைக் காக்க மீண்டும் சட்டமன்றம் நுழைகிறார் 'சைலஜா' டீச்சர்...


மட்டண்ணூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சைலஜா டீச்சரை அத்தொகுதி மக்கள் 58,872 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற செய்திருக்கின்றனர்.



கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றுலிருந்தே இடதுசாரி கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. தற்போதைய நிலவரப்படி கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் மெஜாரிட்டிக்கு தேவையான 71 இடங்களைத் தாண்டி இடதுசாரி கூட்டணி 95 இடங்களுக்கும் மேலாக முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பலான தொகுதிகளில் இன்னும் சில சுற்றுகளே மீதமுள்ள நிலையில் தனிப்பெரும்பான்மையுடன் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வரலாற்று சாதனை நிகழ்த்தியிருக்கிறது.



இடது முன்னணி கூட்டணி 97 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. பா.ஜ.க ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கடந்த ஐந்தாண்டுகளில் செய்த மக்கள் நல செயல்களே அக்கட்சிக்கு தேர்தலில் வாக்குக்களாக கூடுதல் பலம் சேர்ந்திருக்கின்றன. குறிப்பாக, கொரோனா நோய்த்தொற்றை மாநில அரசு எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.



நிலச்சரிவு, நிஃபா வைரஸ், கேரள பெருவெள்ளம் என முன்னதாக பல பேரிடர்களையும், அசாதாரண சூழல்களையும் திறம்பட எதிர்கொண்ட கேரளா கொரோனா வைரஸை எதிர்கொள்ள தயாராகவே இருந்தது. அதற்கு காரணம், சூழலை கணித்து முன்னெச்சரிக்கையாக செயல்பட்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா.



64 வயதான சைலஜா டீச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் அமைச்சரவையில் இரண்டு முக்கிய பதவிகளை கவனித்து வந்தார். 2016 தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்த சைலஜா டீச்சர், கேரள அரசின் சுகாதாரத்துறை மற்றும் சமூகநலத்துறை என இரண்டு மிகமுக்கியமான இலாக்காக்களை கவனித்து வந்தார். சூழல் எவ்வளவு இக்கட்டானதாக இருந்தாலும் துணிந்து போராடும் மனதிடம் கொண்ட சைலஜா கேரளாவின் பல பேரிடர் நேரங்களில் திறம்பட செயல்பட்டிருக்கிறார்.





கொரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கேரளாவில் அதிகமாக இருந்த போதிலும், மாநிலத்தில் உயிரிழப்புகள் மிகவும் குறைவாகவே பதிவாகி இருக்கிறது. கொரோனா முதலாம் அலையில் சூழலை கச்சிதமாக கையாண்டு கேரளாவில் கொரோனா பரவலையும், தாக்கத்தையும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா குறைத்தார். அதன் காரணமாக சைலஜா டீச்சர் மக்கள் மனங்களை வென்றார். சைலஜா கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை எதிர்கொண்ட விதம் இந்தியளவில் பெரிதாக பேசப்பட்டது, தற்போது வரையிலும் பேசப்பட்டு வருகிறது.



கேரள சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட சைலஜாவிற்கு மக்கள் தங்கள் நன்றிக்கடனை இந்த தேர்தலில் வாக்குகளாக செலுத்தியிருக்கின்றனர். மட்டண்ணூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சைலஜா டீச்சரை அத்தொகுதி மக்கள் 58,872 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற செய்திருக்கின்றனர். கடவுளின் தேசத்தை காக்க மீண்டும் சட்டசபைக்குள் நுழையவிருக்கும் கம்யூனிச காம்ரேட் ஷைலஜா டீச்சருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நன்றி: விகடன்

கே.கே.ஷைலஜா அவர்கள் 1980 ஆம் ஆண்டில் மட்டனூரில் உள்ள பழசி ராஜா என்.எஸ்.எஸ். கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டம் மற்றும் விஸ்வேஸ்வரய்ய கல்லூரியில் இளங்கலை கல்வியியல் பட்டம் ஆகியவற்றைப் பெற்றார். பின்னர் அவர் சிவபுரம் உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். ஏழு ஆண்டு சேவைக்குப் பிறகு, முழுநேர அரசியல் நடவடிக்கைக்காக 2004 இல் ஓய்வு பெற்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad