கூடுதல் மின் கட்டணமா? அதுக்கு இது நேரமல்ல - களத்தில் இறங்கிய கமல் ஹாசன்!
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் ஓராண்டின் சராசரி மின் பயன்பாட்டை கணக்கீட்டில் எடுத்துக் கொண்டு, நுகர்வோருக்கு புதிய காப்புத் தொகையை மின்சார வாரியம் கணக்கிட்டு வருகிறது. இவ்வாறு கூடுதலாக வரும் தொகையை வழக்கமான மின் கட்டணத்துடன் சேர்க்க முடிவு செய்துள்ளது. இதனை ஒரே தவணையாகவோ அல்லது மூன்று தவணைகளாகவோ செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையால் வாழ்வாதாரத்தை இழந்து பலரும் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் மின் கட்டணத்துடன் காப்புத் தொகையை சேர்த்து வசூலிப்பது கூடுதல் சுமையாகும் என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் பெரும்பாலும் தங்கள் வீட்டிலேயே அதிக நேரத்தை செலவிட்டனர். இதனால் மின் பயன்பாடு அதிகரித்தது.
எனவே கடந்த ஆண்டு மின் நுகர்வை கணக்கில் எடுத்துக் கொண்டால் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதற்கான நேரம் இதுவல்ல. தற்போது நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, கூடுதல் காப்புத்தொகை என்ற கூடுதல் சுமையில் இருந்து மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment