கொரோனா தடுப்பூசிக்கு ஆதார் கட்டாயம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 15, 2021

கொரோனா தடுப்பூசிக்கு ஆதார் கட்டாயம்?

கொரோனா தடுப்பூசிக்கு ஆதார் கட்டாயம்?


கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் இல்லை என, ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியாவில், பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் பொது மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் முன்பதிவு செய்ய, கோவின் என்ற பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த முன்பதிவின் போது, சம்பந்தப்பட்ட பயனாளியின் ஆதார், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவை தேவை. இந்நிலையில், ஆதார் அடையாள அட்டை இல்லை என்றால், தடுப்பூசி போட மறுக்கப்படுவதாக மத்திய அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இந்நிலையில், இது குறித்து ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கான சேவைகளில் வெளிப்படைத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் ஏற்படுத்துவதற்காக ஆதார் எண் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதார் இல்லாதபோது மாற்று வழிகள் மூலம் பொதுமக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதார் சட்டத்தின்படி ஆதார் இல்லை என்பதற்காக பொதுமக்களின் எந்தவொரு அத்தியாவசிய சேவையும் மறுக்கப்பட கூடாது. எனவே, ஆதார் எண் இல்லை என்பதற்காக, எந்த ஒரு நபருக்கும் கொரோனா தடுப்பூசி, மருந்து, மருத்துவமனையில் அனுமதி மற்றும் சிகிச்சையை மறுக்கக் கூடாது.



ஒருவரிடம் ஆதார் எண் இல்லாவிட்டாலும் அல்லது அந்த நபரின் ஆதார் எண்ணை இணைய வழியில் உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், இணைய வழியில் உறுதிப்படுத்த முடியாமல் போனாலும், ஆதார் சட்டம் 2016-ன்படி, சம்பந்தப்பட்ட அமைப்பு அல்லது துறை அந்த நபருக்கான சேவையை கட்டாயம் வழங்க வேண்டும். சேவை மறுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad