மாற்றுத்திறனாளியை 15 கிமீ இழுத்துச் சென்ற குடும்பம் மதுரையில் உணவின்றி தவிப்பு: முதல்வருக்குக் கேட்குமா கதறல்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 7, 2021

மாற்றுத்திறனாளியை 15 கிமீ இழுத்துச் சென்ற குடும்பம் மதுரையில் உணவின்றி தவிப்பு: முதல்வருக்குக் கேட்குமா கதறல்?

மாற்றுத்திறனாளியை 15 கிமீ இழுத்துச் சென்ற குடும்பம் மதுரையில் உணவின்றி தவிப்பு: முதல்வருக்குக் கேட்குமா கதறல்?



நாகர்கோவில் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். பிறவி மாற்றுத்திறனாளி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வீராயி என்ற பெண்ணை மணமுடித்து, அதே ஊரில் பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

இந்த சூழலில் மணிகண்டன் 2 வாரத்திற்கு முன் தனது மனைவி, குழந்தை மற்றும் நண்பருடன் பழனி முருகன் கோயிலுக்குச் சென்றிருந்தார். இவர்கள் பழனி சென்ற சமயம் மாநிலம் முழுவதும் அவசரக் கால முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

முன் அறிவிப்பின்றி கிடைத்த ஊரடங்கு தகவலால் மணிகண்டன் குடும்பத்தார், அவரது நண்பர் உள்ளிட்டோர் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத நிலையில் உணவு கூட இல்லாமல் பழனியிலே தவித்து வந்துள்ளனர். இவர்கள் உணவுக்கு வழியில்லாத சூழலில் எப்படியாவது ஊருக்குச் சென்றவிட வேண்டும் எனப் பல முயற்சிகள் எடுத்துள்ளனர். அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளது.

ஒருவழியாக மதுரை மாவட்டத்திற்குக் காய்கறி ஏற்றி செல்லும் சரக்கு லாரி ஓட்டுநரிடம் பேசி பரவை காய்கறி சந்தை வந்தடைந்தனர். அங்கு உணவு இல்லாமல் பசியோடு தவித்த மணிகண்டன் குடும்பத்தாருக்கு, அங்கிருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் உணவுகளை வழங்கி உதவி செய்துள்ளனர்.



மதுரையிலும் தங்குமிடம் இல்லாத சூழலில் சொந்த ஊருக்குச் செல்வதற்காக பல்வேறு முயற்சிகளை இவர்கள் தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர். எதுவும் பலனளிக்காத நிலையில் பரவையிலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்குச் செல்ல மணிகண்டன் குடும்பத்தார் முடிவெடுத்துள்ளனர்.

மணிகண்டனால் நடக்க இயலாது. இதனால் அவரை சக்கரம் பொருத்திய ஒரு கட்டையில் அமர வைத்து 15 கிமீ ஒவ்வொருவராக சுழற்சி முறையில் இழுத்தபடி மதுரை சாலைகளில் சென்றுள்ளனர். இடையில் இவர்கள் சோர்வுக்குத் தண்ணீர் மட்டுமே ஆறுதலாக இருந்துள்ளது.


மணிகண்டன் உடல்நிலை கருதி அவரது மனைவியும் நண்பரும் இப்படி இழுத்துக் கொண்டே சாலையில் சென்ற சம்பவம் பார்ப்பவர்கள் கண் கலங்க செய்தது. ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு போக்குவரத்து தொடங்கினால் சொந்த ஊருக்குச் செல்லலாம் என்ற ஏக்கத்தோடு மாட்டுத்தாவனி பேருந்து நிலையத்தில் இந்த குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

மாற்றுத்திறனாளி கணவருடன் தவித்துவரும் பெண்ணிற்கு அரசு ஏதேனும் உதவிசெய்து அவரது சொந்த ஊருக்குச் செல்வதற்கு உதவ வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad