கொரோனா இறப்பு சான்றிதழ்; தலைமைச் செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 5, 2021

கொரோனா இறப்பு சான்றிதழ்; தலைமைச் செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு!

கொரோனா இறப்பு சான்றிதழ்; தலைமைச் செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை கடந்த மே 21ஆம் தேதி 36 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டது. அதன்பிறகு தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகின்றன. நேற்று புதிதாக 21,410 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. 32,472 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 443 பேர் பலியாகி இருக்கின்றனர். தற்போது 2,57,463 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு வரும் 7ஆம் தேதி காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காய்கறி, பழங்கள், மளிகை, மொத்த விற்பனை இறைச்சி மற்றும் மீன் கடைகள், மின்பொருட்கள், கல்விப் புத்தகங்கள், ஹார்டுவேர் கடைகள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு பொருந்தாது.

இங்கு ஏற்கனவே அமலில் இருக்கும் தளர்வுகளுடன் சில புதிய தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி இல்லை. கோயில்களில் வழிபாடு செய்ய அனுமதி கிடையாது. டீக்கடைகள், சலூன் கடைகள், ஜவுளி கடைகள், மால்கள் திறக்க அனுமதி இல்லை. மறு அறிவிப்பு வரும் வரை டாஸ்மாக் கடைகள் மூடியே இருக்கும்.

அலுவலகம் செல்பவர்கள் வாகனங்களில் பயணம் செய்ய இ-பதிவு செய்வது உள்ளிட்ட நடைமுறைகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர்

இறையன்பு இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு கையூட்டு பெற்றால் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பலரும் கையூட்டு பெறுவதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி மாநில அரசுக்கு தகவல் சென்றதை அடுத்து தலைமைச் செயலாளர் மேற்குறிப்பிட்ட உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad