300 யூனிட் மின்சாரம் இலவசம் - முதலமைச்சர் வாக்குறுதி!
உத்தரகண்ட் மாநிலத்தில், அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என, ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில், அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில், பா.ஜ.க., பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில், காங்கிரஸ் கட்சி பணியாற்றி வருகிறது. கட்சியை தேசிய அளவில் பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
அடுத்தாண்டு நடைபெறும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநில மக்களை கவரும் வகையில், சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிப் பெற்றால், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கும். பழைய மின்சார கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும். 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க சிறிது கால அவகாசம் எடுக்கும், ஆனால் நாங்கள் அதை செய்வோம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதே தேர்தல் வாக்குறுதிகளை, பஞ்சாப் மாநில மக்களுக்கும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment