திராவிட மாடல்: கனவு நிறைவேறுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

திராவிட மாடல்: கனவு நிறைவேறுமா?

திராவிட மாடல்: கனவு நிறைவேறுமா?


தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆலோசனைகள் கூறுவதற்காக ஐவர் குழு அமைக்கப்பட்ட நாளிலிருந்து அது எந்தத் திசையில் நடைபோடப் போகிறது என்ற கேள்வி சமூக அக்கறையாளர்களிடையே இருந்து வந்தது. வெள்ளியன்று (ஜூலை 9) காணொலி வாயிலாக நிகழ்ந்த குழுவின் முதல் சந்திப்பில், அந்தத் திசைக்கான வழிகாட்டி மரத்தை ஊன்றுவது போல உரையாற்றியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசர் அரவிந்த் சுப்பிரமணியன், தமிழகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவரான ஐஏஎஸ் அதிகாரி எஸ். நாராயணன், பிரான்ஸ் நாட்டவரும் பொருளாதார ஆய்வுக்கான நோபல் விருது பெற்றவருமான எஸ்தர் டுஃப்லோ, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவரும் தமிழக சமூக வளர்ச்சி குறித்து ஆராய்ந்திருப்பவருமான ஜான் ட்ரேஸ் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் ராஜன், தலைமைச் செயலர் இறையன்பு, நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.“அனைத்து சமூகங்களையும், பிரிவினரையும், மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் ‘திராவிட மாடல்’. அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இதற்கு நீங்கள் வழிகாட்ட வேண்டும்,” என்ற முதலமைச்சர் உரையின் தொடக்க வாக்கியத்திலேயே ஒரு செய்தி இருக்கிறது. “திராவிடம்” என்பதை ஒரு குறுகிய இனவாதச் சொல்லாடலாக அடையாளப்படுத்தி அதற்கு எதிரான கருத்தாக்கத்தைக் கட்டமைக்கிற முயற்சிகள் தொடர்ந்து நடந்துவந்திருக்கின்றன. “திராவிடக் கட்சிகள்” என்ற பதம் அதற்காகவே பயன்படுத்தப்படுவதுண்டு.



ஆனால், வரலாறு, பண்பாடு, அரசியல், சமூக மாற்றத்திற்கான இயக்கம் ஆகிய தடங்களிலிருந்து ஒரு சித்தாந்தக் கருத்தாக்கமாக உருவெடுத்திருப்பது திராவிடம். சமூகநீதி இலக்குகள், பாலினச் சமத்துவ நோக்கங்கள், சாதியப் பாகுபாடு ஒழிப்பு லட்சியங்கள், மதநல்லிணக்க நாட்டங்கள், பகுத்தறிவுக் கண்ணோட்டங்கள் என அனைவருக்குமான முற்போக்குக் கொள்கைகள் அந்தக் கருத்தாக்கத்தில் பொதிந்திருக்கின்றன. நாட்டின் விடுதலைப் போராட்டம், பொதுவுடைமை இயக்கம் உள்ளிட்ட தாக்கங்களிருந்தும் அந்தக் கருத்தாக்கம் உருவானது எனலாம். கூர்ந்த முனைப்பின்மை, கோட்பாட்டு உறுதியற்ற சமரசங்கள் போன்ற பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்ற போதிலும், அடிப்படையில் திராவிடம் என்பது சமத்துவ நீதிக்கான சித்தாந்தமாக உறுதியாக ஊன்றியிருக்கிறது. அதனை எடுத்துக்காட்டும் வகையில் வெளிப்பட்டுள்ளது “அனைத்து சமூகங்களையும், பிரிவினரையும், மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் திராவிட மாடல்,” என்ற முதலமைச்சரின் தொடக்க வரி. இது ஐவர் குழுவுக்கான வழிகாட்டல் மட்டுமல்ல, திராவிட எதிர்ப்பாளர்களுக்குமான விளக்கமாகவும் ஒலித்திருக்கிறது.



“பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளில் பொதுவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள் குறித்த ஆலோசனைகள் தர வேண்டும். பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு சமமான வாய்ப்புரிமை வழங்கவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பான ஆலோசனைகளும் வழங்க வேண்டும். மாநிலத்தின் மொத்தமான நிதி நிலையைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கு சேவை செய்வதற்கான மாநிலத் திறனை மேம்படுத்தவும், புதிய திட்டங்கள் மற்றும் நிறைவேற்றக் கூடிய தீர்வுகளுக்கான ஒரு வலுவான ஆலோசனை மையமாக நீங்கள் திகழ வேண்டும். எவ்வித பிரச்சினைகளுக்கும் ஆராய்ந்து சாத்தியப்படக்கூடிய சிறந்த சமூகப் பொருளாதாரத் தீர்வுகளை வழங்க வேண்டும். மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது அமைய வேண்டும். இக்கனவுகள் சாதாரணமாக நிறைவேறிவிடாது என்று எனக்கும் தெரியும். நமது சிந்தனை ஒன்றாகவும் உண்மை நிலவரம் வேறாகவும் இருக்கிறது என்பதை நானும் அறிவேன்,” என்று ஸ்டாலின் குழுவினரிடம் பேசியிருப்பதில் சுய தம்பட்டமோ, மிகைப்படுத்தலோ இல்லாத, நடப்பு நிலவரம் பற்றிய புரிதல் இருக்கிறது. இந்த நோக்கங்கள் மிகப்பரந்த, புரட்சிகரமான சமூக இயக்கங்களாகவும் முன்னெடுக்கப்படுகிறபோதுதான் பெருமளவுக்கு நிறைவேறும் என்றாலும், அதற்குக் களம் அமைத்துத் தருவதாக மாநிலத்தின் அனைத்துமட்டப் பொருளாதார மேம்பாட்டிற்கான கொள்கைகள் அமைய முடியும்.



குழு எவ்வாறு இயங்கும்?

ஐவரின் ஆலோசனைகள் தனித்தனியாக அளிக்கப்படுமா அல்லது குழுவின் ஒருமித்த கருத்துகளாக முன்வைக்கப்படுமா, அவற்றில் எவையெல்லாம் அரசால் ஏற்கப்படும், எப்படிச் செயல்படுத்தப்படும் என்றெல்லாம் வரும் நாட்களில் காணலாம்.

“தமிழ்நாடு அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கின்றன. நிதி ஆதாரம் என்பது விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில துறைகளின் மூலமாக மட்டும்தான் வருகிறது. வரி வசூலில் இருந்த மாநில உரிமைகளை ஒன்றிய அரசு ஜிஎஸ்டி மூலமாகப் பறித்துவிட்டது. அதனால் வரி வசூலை நம்ப முடியாது. நமது வளங்களைக் கொண்டு நம்மை வளப்படுத்திக் கொள்ளும் நிலைமையில் இருக்கிறோம். அதற்கென உள்ள வழிமுறைகளைத் தமிழ்நாட்டு அரசுக்கு காட்டுங்கள்,” என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மாநில உரிமைகளும் அதிகாரங்களும் கைப்பற்றப்படுவதால் கூட்டாட்சி மாண்பிற்கு எழுந்துள்ள சவால் பற்றிய அரசியல் குரலாக ஒலித்திருக்கிற இந்த வேண்டுகோள், அரசுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள கடன்கள், தமிழகத்தின் வளநிலைமைகள் என்ற பின்னணியில் மாற்று வழிகளைக் காட்ட வேண்டுமென்ற சவாலையும் குழுவின் முன் நிறுத்தியிருக்கிறது.



தொழில்துறை, வேளாண்மை, வணிகம், பொதுத்துறை, தனியார் துறை, கூட்டுத் துறை, நிதி திரட்டல்கள், நிதி ஒதுக்கீடுகள் என ஆலோசனைகளுக்கான விரிந்த தளங்கள் பற்றியும், ஒவ்வொரு தளத்திலும் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்தும் ஆக்கப்பூர்வமான, திட்டவட்டமான செயல்பாடுகளுக்கான மாற்றுக் கொள்கைகள் குறித்தும் ஆழ்ந்த புரிதலும் அக்கறையும் கொண்ட பொருளாதார ஆய்வாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் பலர் தமிழகத்திலேயே இருக்கிறார்கள். அவர்களையும் அணுகுவதிலிருந்து ஐவர் குழு தனது பணிகளைத் தொடங்க வேண்டும். பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் அறிந்துகொள்ளும் முயற்சிகளை குழு மேற்கொள்ள வேண்டும். அத்தகைய விரிந்த தளங்களிலிருந்து வரக்கூடிய அனுபவத்தில் ஊறிவரும் கருத்துகள் மிகப் பரந்ததாக இருக்கும். இங்கே, மூன்று முக்கியமான களங்களில் அடிப்படையான மாற்றுக் கொள்கைகளை மட்டும் முன்மொழியலாம்.




மூன்று முன்னுரிமைகள்

முதலாவதாக – உள்ளாட்சி அமைப்புகள் என்ற களம். மாநில அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மத்தியில் குவிக்கப்படுவது பற்றிய விசனம் எவ்வளவு முக்கியமானதோ, அதற்குச் சற்றும் குறையாத முக்கியத்துவம் வாய்ந்ததுதான் மாநிலத்திற்குள் அதிகாரக்குவிப்பு உடைக்கப்பட்டு, உள்ளாட்சிகள் உறுதிப்படுத்தப்படுவது. கிராம ஊராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி என்றிருக்கிற உள்ளாட்சிகள் வெறும் நிர்வாகக் கிளைகள் அல்ல, அவை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற அரசுகள். “லோக்கல் கவர்மென்ட்” என்றால் உள்ளூர் அரசுதானே? அதற்குரிய மரியாதை உள்ளூர்த் தேவைகளுக்கான திட்டம் வகுப்பது, நிதி ஒதுக்குவது, செயல்படுத்துவது என அதிகாரங்களை முழுமையாக உறுதிப்படுத்துவதில்தான் இருக்கிறது. திட்டம்-நிதி-செயல் என்ற தன்னாட்சி உரிமைகளோடு உள்ளாட்சிகள் இயங்குகிறபோது, மாநிலத்தின் வளர்ச்சி வேர் மட்டத்திலேயே வலுவாக ஊன்றப்பட்டுவிடும். மக்களின் உண்மையான, முழுமையான பங்கேற்புக்கு வழியமைக்கப்பட்டுவிடும்.



உள்ளாட்சி அமைப்புகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்வது என்பதோடு நில்லாமல், மாநிலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி என்ற திராவிட மாடல் கோட்பாட்டை நிலைப்படுத்துவதற்கான கொள்கைப்பூர்வமான வழிகாட்டல்களையும் ஐவர் குழு வழங்க வேண்டும். தமிழகத்தில் அருமையான சமூக அசைவுகளுக்கு இட்டுச் சென்ற போக்குவரத்து அரசுடைமை, வீட்டுவசதி வாரியம், சமச்சீர் கல்வி திட்டங்கள் போல, உள்ளாட்சிகளுக்கான அதிகாரப் பரவல் கொள்கை அடுத்த கட்ட வளர்ச்சிக்குப் பாய்ச்சல் வேகத்தில் இட்டுச்செல்லும். உள்ளாட்சி அமைப்புகளோடு மட்டுமல்லாமல், உள்ளாட்சிகளின் மேம்பாட்டுக்காகச் செயல்படும் அமைப்புகளும் இருக்கின்றன. அவர்களுடனும் கலந்தாலோசிப்பது இந்தத் திசையிலும் சரியாக அடியெடுத்துவைக்க உதவும். இதற்கெல்லாம் எங்கோ சென்று முன்னுதாரணங்களைத் தேட வேண்டியதில்லை, அண்டை உறவாக இருக்கும் கேரளத்திலேயே சிறப்பான சான்றுகள் இருக்கின்றன.



அடுத்து, கல்வி. இன்றளவும் இந்திய அளவில், உலக அளவில் தமிழகத்தைச் சேர்ந்த பலரும் பல்வேறு வகைகளில் சிறப்பாகப் பணியாற்றிவருகிறார்கள். பொருளாதாரத்திலும் அறிவியல் ஆய்விலும் வேளாண் வளர்ச்சியிலும் அவர்களது பங்களிப்பு அளப்பரியது. தொழில், சமூக முன்னேற்றம் ஆகியவற்றுக்கான குறியீட்டு அளவுகளில் தமிழகம் முதன்மையான இடங்களைப் பிடித்திருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அரசுக் கல்வி என்ற அழகான கட்டமைப்புதான். குறிப்பாகக் கிராமங்களிலும் அரசுப் பள்ளிகள் என்ற நுண்பார்வையோடு மாநிலம் முழுக்க வலுவாக ஏற்படுத்தப்பட்டுள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி என்ற கல்விக்களம் இந்த முன்னேற்றத்தில் மறைக்க முடியாத சக்தியாக இருந்துவந்திருக்கிறது. அதிலே வணிக நோக்கத்தில் ஏற்பட்ட தனியார் ஆக்கிரமிப்பு, பண்பாட்டு உணர்வு வளர்ச்சியிலும்கூட அரிமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புற்றாகப் பரவிவிட்ட இந்த ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டுவது உடனடி சாத்தியமற்ற நெடியதொரு போராட்டமாக இருக்கும். ஆனால், அது தொற்றிவிடாமல் தடுக்கக்கூடிய வகையில் அரசுப் பள்ளிகளைப் பேரியக்கமாக வலுப்படுத்துவது, வளப்படுத்துவது, பற்றாக்குறை என்பதே இல்லாமல் அனைத்துத் துறைகளுக்குமான ஆசிரியர்களோடு வளர்த்தெடுப்பதும் சாத்தியமே. அந்த இலக்கோடு கல்வித் துறை வளர்ச்சிக்கான பொருளதார ஆலோசனை வழங்குவதாக ஐவர் குழு அறிக்கைகள் தயாராகுமானால் தமிழகம் இன்னுமொரு மறுமலர்ச்சியைக் காணும்.



மூன்றாவதாக, நோயற்ற வாழ்வுக்கான பொதுசுகாதாரத் தளம். கொரோனா பெருந்தொற்றை ஒப்பீட்டளவில் தமிழகம் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறது என்பதற்கு உச்ச நீதிமன்றம் சான்றளித்திருக்கிறது. நாட்டிலேயே தமிழ்நாடு சுகாதார உள்கட்டமைப்பில் சிறந்து விளங்குவது கொரோனா 2ஆவது அலையில் பிரதிபலித்திருக்கிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பாராட்டியிருக்கிறார். இந்தப் பாராட்டிற்கான மிக அடிப்படையான தகுதி இங்கே வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ள அரசுத் துறை மருத்துவனைச் சேவைகள்தான்.

அதிலே தனியார் புகுந்து கைப்பற்ற வழி செய்யப்பட்டது ஒரு சோகம். தனிப்பட்ட மருத்துவர்கள் தங்களது சொந்த ஆலோசனைக் கூடங்களையும், சிகிச்சை நிலையங்களையும் ஏற்படுத்திக்கொள்வது வேறு. ஆனால் அதை வர்த்தக வலைப் பின்னலாக்கியிருக்கிற கார்ப்பரேட் மருத்துவ மாளிகைகள் வேறு. அவர்களின் பிடியில் சிக்கிக்கொள்ளாமல் பெரும்பகுதி மக்களைப் பாதுகாக்கிற வகையில், அமைச்சர்கள், அதிகாரிகள், தொழிலாளர்கள், உழவர்கள், வறியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் விரும்பி நாடத்தக்க விதத்தில் இந்தப் பொதுசுகாதாரக் கட்டமைப்பை நவீனமாக, முறைகேடுகளுக்கு இடமற்றதாக, தூய்மையின் இலக்கணமாக விரிவுபடுத்தியாக வேண்டும்.



சட்டப் பாதுகாப்புகளோடு இருக்கும் கார்ப்பரேட் மனைகளின் பாதைகளைத் தடுக்காமலே இந்தச் சாலையை விரிவுபடுத்த முடியும். வருவாயிலும் சேமிப்பிலும் பெரும்பகுதியை உயிரோடு வாழ்ந்திருப்பதற்கான மருத்துவத்திற்காகக் செலவிட்டாக வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து மக்கள் விடுவிக்கப்படுவது மாநிலத்தின் வளர்ச்சியை உயிர்ப்போடு அடைவதற்கான ஆதுரசாலையைத் திறந்துவிடும். அது நோயகற்றும் அனைத்து மருத்துவ முறைகளும் பாகுபாடின்றிப் பயணிக்கிற சாலையாகவும் இருந்தாக வேண்டும்.

‘உள்ளே’ வர இயலாத பிரிவினர்

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று தொடர்ந்து சொல்லப்பட்டுவந்தாலும், உள்ளேயே நுழையவிடப்படாத பிரிவினர் இருக்கிறார்கள். பொதுமுடக்கத்தின்போது பொருளாதாரமும் பெருமளவில் முடக்கப்பட்டதால் பாதிக்க்ப்பட்டவர்களுக்கு அரசுகள் தாங்களாக முன்வந்தும், நீதிமன்றங்களின் தலையீட்டாலும் பல்வேறு மீட்புத் திட்டங்களைச் செயல்படுத்தின. ஆனால், தெருவில் நடமாட்டமே இல்லாமல் போனதாலும் தெருக்களுக்குள் போக முடியாததாலும் கையேந்தவும் முடியாமல் போன பிச்சைக்காரர்கள் நிலை? குடும்ப நெருக்கடிகள் முதல் கடத்தியவர்களின் கெடுபிடிகள் வரையிலான மற்றவர் குற்றங்களால் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டவர்களின் கதி? மண்ணில் வாழ்ந்திருப்பதற்கான உரிமைகள் இவர்களுக்கும் உண்டு, இவர்களைப் போன்ற ‘கணக்கில்’ கொண்டுவரப்படாத வேறு சிலருக்கும் உண்டு. அவர்களையும் கைவிடாத வளர்ச்சியே அனைவரையும் உள்ளடக்கியதாக, சமூகநீதியை மேலும் உயர்த்திப்பிடிப்பதாக இருக்கும்.



இவ்வாறு உள்ளாட்சி, கல்வி, மருத்துவம், எளியோர் வாழ்வு, இன்னும் சுட்டிக்காட்டப்படக்கூடிய பல்வேறு களங்களுக்கான பரந்த பார்வைகளோடு ஆலோசனைகள் வழங்கப்படுமானால், அவை செயல்படுத்தப்படுமானால், “தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதரும் மகிழும் வகையில், இது எமது அரசு என்று சொல்லி அனைவரும் பெருமைப்படும் வகையில் இந்த அரசு இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்,” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது உரையின் முடிவில் கூறியிருப்பது நனவாகும்.



No comments:

Post a Comment

Post Top Ad