தமிழக பள்ளிகளில் இந்த சான்றிதழ் கட்டாயம்: பள்ளி கல்வித்துறை திடீர் உத்தரவு!
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், பள்ளிகளில் கொரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை அடுத்த மாதம் திறக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், மத்திய அரசின் சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மத்திய அரசின் Fit India Movement என்ற சான்று கட்டாயமாகும். www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வகை பள்ளிகளும் சான்று பெற வேண்டும். ஆனால் இதுவரை மிகக் குறைவான பள்ளிகளே சான்றுக்காக பதிவு செய்துள்ளன.
எனவே, பதிவு செய்யாத பள்ளிகள் ஜூலை 20ஆம் தேதிக்குள் பதிவு செய்து சான்றை கட்டாயம் பெற்றாக வேண்டும். பள்ளிகள் சான்று பெறுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணித்து அறிக்கை தர வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment