சத்துணவு செய்யும் அற்புதம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

சத்துணவு செய்யும் அற்புதம்

சத்துணவு செய்யும் அற்புதம்

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) என்னும் ஆய்விதழில் அண்மையில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று தமிழகத்தின் சத்துணவுத் திட்டம், அதைப்போன்ற இதர மதிய உணவுத் திட்டங்கள் ஆகியவை குறித்த முக்கியமான சில முடிவுகளை முன்வைக்கிறது.
1993 முதல் 2016 வரையிலான காலகட்டத்தின் நிலவரங்களின்படி பள்ளிக்கூடங்களில் இலவச உணவு சாப்பிடும் குழந்தைகளில் உயரக் குறைபாடு என்னும் பிரச்சினை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் உணவு உட்கொண்ட பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் வயதுக்கேற்ற உயரம் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை, அப்படி உட்கொள்ளாத பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் வயதுக்கேற்ற உயரம் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்பதை அந்த ஆய்வு காட்டுகிறது. பள்ளிகளில் வழங்கப்படும் உணவானது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எப்படிப் பலனளிக்கிறது என்பதை இது காட்டுகிறது.

2005இல் மதிய உணவுத் திட்டம் அமலாக்கப்பட்ட இடங்களில் 2016ஆம் ஆண்டில் உயரக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.



சத்துணவு என்னும் அருமருந்து

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆய்வுக் கட்டுரை 2006 முதல் 2016வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் வயதுக்கேற்ற உயரம் மேம்பட்டதில் பள்ளிகளின் மதிய உணவுக்கு 13 முதல் 32 சதவீதம் வரை பங்கு இருப்பதாகக் கூறுகிறது. குழந்தைகளின் உயரக் குறைபாட்டினைத் தீர்க்க அவர்களுடைய உடல்நலத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், தாய்மார்களின் உடல்நலம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்று சத்துணவு நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். பெண்கள் தாய்மார்களாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்களுடைய சுகாதாரத்தில் கவனம் செலுத்தப்பட்டால்தான் மகப்பேறின்போது அவர்களுடைய உடல் நலம் நன்றாக இருக்கும்; அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான இருக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. பெண்கள் பள்ளிப் பருவத்தில் தங்களுடைய பள்ளிகளில் உணவு உட்கொள்வதற்கும் சில ஆண்டுகளுக்குப் பின் அவர்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு இருப்பதை இந்த ஆய்வு நிரூபிக்கிறது.



இந்தியாவில் கணிசமான அளவிலான பெண்கள் பள்ளிப் படிப்பை முடித்ததும் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். எனவே, குழந்தைகளின் நலனைக் காக்க வேண்டுமானால், பெண்கள் பள்ளிகளில் படிக்கும்போது அவர்களுக்குச் சத்தான உணவு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்த ஆய்வில் பணிபுரிந்தவர்களில் ஒருவரான பூர்ணிமா மேனன் கூறியிருக்கிறார்.

பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டபோது பள்ளிகளில் உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. அரசாங்கங்கள் மக்களுக்கான நிவாரணமாகப் பணத்தையும் உணவு தானியங்களையும் கொடுத்தாலும் பள்ளிகளில் சமைத்துச் சூடாகக் கிடைக்கும் உணவின் தாக்கம் அதிகம். பல வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாரபட்சம் இன்னமும் நிலவும் இந்தியாவில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பள்ளிகளில் கிடைக்கும் சத்துணவுக்கு இணையான உணவு வீடுகளில் கிடைப்பது அரிது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.



உயிர் காக்கும் இலவசங்கள்

பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு என்பது அந்தச் சமயத்தில் அதை உண்ணும் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கும் பலனளிப்பது கண்கூடாகத் தெரிகிறது. இலவசங்களுக்கு எதிராகப் பொத்தாம் பொதுவாகக் கருத்து சொல்பவர்கள் இந்திய யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே பெரும்பாலும் பேசுகிறார்கள். இலவசங்கள் மக்களைச் சோம்பேறிகளாக்குகின்றன என்று கருத்து சொல்பவர்கள் இலவசங்களை வாங்கிப் போட்டுக்கொண்டு கவலையில்லாமல் வீட்டில் உட்கார்ந்திருக்கும் மக்களைப் பற்றி ஏதேனும் ஆய்வு செய்திருக்கிறார்களா அல்லது அத்தகைய ஆய்வு எதையாவது சுட்டிக்காட்டுகிறார்களா என்றால் இல்லை. என்றாலும் ‘இலவசம் சோம்பேறியாக்கும்’ என்னும் கருத்தைச் சிலர் கிளிப்பிள்ளை போலச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.



வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை நன்றியுடன் நினைவுகூர வைக்கிறது. தமிழ்நாட்டில் எண்பதுகளின் தொடக்கத்தில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தியபோதும் இதேபோன்ற விமர்சனங்கள் எழுந்தன. தொலைநோக்கற்ற திட்டம், மக்களைப் பிச்சைக்காரர்களாக்கும் திட்டம் என்றெல்லாம் பலரும் சாடினார்கள். ஆனால் எம்ஜிஆர் சிறிதும் அசராமல், பொருளாதார நெருக்கடி பற்றிக் கவலைப்படாமல் இந்தத் திட்டத்தை அமல்படுத்தினார். அதன் பலன்கள் அப்போது தெரியவில்லை. அடுத்த இருபது ஆண்டுகளில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இடைநிற்றல் குறைந்தது. குழந்தைகளின் ஆரோக்கியம் கணிசமாக உயர்ந்தது. பள்ளிக் கல்வி கற்பவர்கள் அதிகமானதில் உயர் கல்வியில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்தது. உயர் கல்வி கற்றவர்கள் எண்ணிக்கையும் வேலைவாய்ப்புக்கான திறன் பெற்றோர் எண்ணிக்கையும் கூடின.



அந்த ஒரு வேளை உணவு இப்படிப் பல்வேறு மாயங்களை நிகழ்த்திக் காட்டியது. சத்துணவுத் திட்டத்தின் சிறப்புகளை உலக வங்கி பாராட்டிய பிறகுதான் தமிழகத்திலேயே பலருக்கு அதன் அருமை புரிந்தது. அடுத்தடுத்து வந்த அரசுகள் சத்துணவில் பல்வேறு அம்சங்களைச் சேர்த்து அதை மேலும் பலனுள்ளதாக ஆக்கினார்கள். இந்தியாவில் பல மாநிலங்களும் பின்பற்றும் முன்னோடித் திட்டமாக இது விளங்குகிறது. தற்போது வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வு, இந்தத் திட்டத்தால் அடுத்த தலைமுறை எப்படிப் பயன் பெற்றுள்ளது எனபதைக் காட்டுகிறது.

சலுகை அல்ல, உரிமை

மக்கள் தாங்களாகவே தங்கள் உணவைப் பெறக்கூடிய வகையில் அரசு திட்டங்கள் தீட்டி நடைமுறைப்படுத்தினால் இலவசங்களுக்கு அவசியமே இருக்காதே என்று மேதாவித்தனமாகச் சிலர் வாதிடுவார்கள். அனைத்துத் தரப்பினரின் வருமானத்தையும் பெருக்கக்கூடிய பொருளாதாரத் திட்டங்களைத் தீட்டி அமல்படுத்துவது எனபது அரசின் முக்கியக் கடமை என்பதில் மறுப்பில்லை. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இது எவ்வளவு சிக்கலான சவால், இதைச் செய்வதற்கு எத்தனை காலம் பிடிக்கும் என்பதையெல்லாம் யோசிக்க வேண்டும். வறுமையில் வாடும் குடும்பங்களின் குழந்தைகள் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி சாத்தியமாகும்வரை பட்டினி கிடக்க வேண்டியிருக்கும்.



வளர்ச்சி பெற்ற நாடுகளிலும் கல்வி உள்ளிட்ட சில அடிப்படை அம்சங்கள் இலவசமாக அளிக்கப்படுவது ஏன் என்று பார்க்க வேண்டும். பிரிட்டன் முதலான நாடுகளில் எல்லாக் குடும்பங்களுக்குமே குழந்தை நலன் பேணுவதற்கென்று பல்வேறு வகையில் அரசு உதவிகள் கிடைக்கின்றன. குழந்தைகளின் நலன் என்பதை அவர்களின் பெற்றோரின் பொறுப்பில் மட்டுமே விட்டுவிடுவது பொறுப்புள்ள அரசாங்கத்தின் அணுகுமுறையாக இருக்க முடியாது என்பதே இதற்குப் பின்னால் உள்ள சிந்தனை. குழந்தைகளின் நலனுக்காக பிரிட்டன் அரசு என்னென்ன உதவிகளைச் செய்திறது என்பதை அந்நாட்டு அரசின் இணையதளத்தில் காணலாம். இப்படியெல்லாம் உதவிகள் செய்து பெற்றோரை ஏன் சோம்பேறி ஆக்குகிறீர்கள் என்று யாரும் அங்கே கேள்வி எழுப்பவில்லை.

முழுமையான, பரவலான வளர்ச்சிக்கான முயற்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும்போதே இன்றைய நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மக்களின் நலன்களைச் சார்ந்த நலத் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியது அரசின் கடமை. தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் இதில் மிகவும் கவனமாக இருக்கின்றன. ஆரோக்கியமான குடிமக்களும் குழந்தைகளும் நாட்டின் சொத்துக்கள். சத்துணவு போன்ற திட்டங்கள் அரசின் உதவிகள் அல்ல; கடமைகள். இவை மக்கள் பெறும் சலுகைகள் அல்ல, உரிமைகள். ஏனென்றால் தேசத்தின் வளத்தில் அதன் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. சாமானிய மக்கள் உள்பட அனைத்து மக்களும் செலுத்தும் மறைமுக வரியானது அரசின் வருமானத்தில் பாதிக்கும் மேல் பங்களிக்கிறது.


இன்றைய தலைமுறையை மட்டுமின்றி நாளைய தலைமுறையையும் காக்கும் விதை இத்தகைய திட்டங்களில் இருப்பதை வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு நிரூபிக்கிறது. உணவுக் கிடங்குகளில் அபரிமிதமான உணவு வீணாகும் அதே நாட்டில் பட்டினியால் அதன் குடிமக்கள் வாடுவதும் மடிவதும் குரூரமான யதார்த்தங்கள். மக்கள் நலத் திட்டங்கள் இத்தகைய குரூரங்களைச் சற்றேனும் குறைக்கும் திறன் படைத்தவை என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

No comments:

Post a Comment

Post Top Ad