சரியான செக்; என்ன செய்யப் போகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி?
கடந்த 2011-15 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கணேஷ் குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி மீது மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் மோசடி நடைபெற்ற காலத்தில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், தங்க நகைகளின் ரசீதுகள், ஆபரணங்கள், வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பெறப்பட்ட சுய விவரக் குறிப்புகள், நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள், அவர்களிடம் இருந்து பெற்ற பணம் குறித்த விவரப் பட்டியல் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த சூழலில் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட மோசடியில் ஈடுபட்ட 47 பேருக்கு எதிராக 6,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான நகல் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்வதாக இருந்தால் 47 பேரும் ஒரே நேரத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
சிறப்பு சலுகை வழங்க முடியாது
ஒவ்வொருவராக மனு தாக்கல் செய்து வழக்கு விசாரணையை காலம் தாழ்த்தக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்களுக்கு எதிராக அருள்மணி என்பவர் கொடுத்த பண மோசடி புகார் தொடர்பான வழக்கு நீதிபதி அலிசியா முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அவர் நேற்றும் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்து, அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவோ, சிறப்பு சலுகை வழங்கவோ முடியாது என்று குறிப்பிட்டனர். இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment