டார்ச் லைட் சூரியனானது: சட்டையை மாற்றிய மகேந்திரன்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நிதி மய்யம் கட்சி போட்டியிட்டது. ஆனால், ஒரு இடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தான் போட்டியிட்ட கோவை தெற்கில் தோல்வியடைந்தார்.
தேர்தல் தோல்வியின் எதிரொலியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த ஆர்.மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகினார். கட்சி வெளிப்படைத்தன்மை இல்லாமல், ஜனநாயக விரோத முறையில் செயல்பட்டு வருவதாகவும், கமல் ஒரு சில நபர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்றும் மகேந்திரன் குற்றம் சாட்டினார்.
கட்சியில் இருந்து மகேந்திரன் விலகியதும், பொதுச்செயலர் குமாரவேல், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா உள்ளிட்ட பலரும் அக்கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகினர்.
இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் அவர் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகின. கோவை மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கை பலப்படுத்தும் பொருட்டு அவருக்கு முக்கியப் பொறுப்பும் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மதுரவாயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா, அதிமுக முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் இன்றைய நிகழ்வின் போது திமுகவில் இணைந்தனர்.
திமுகவில் இணையும் நிகழ்வின் போது, அக்கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்த சட்டையை மகேந்திரன் அணிந்திருந்தார். முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த போது, அக்கட்சியின் சின்னமான டார்ச் லைட் லோகோவுடன் கூடிய சட்டையை அவர் அணிவது வழக்கம் என்பது கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment