அமைச்சர் பொன்முடிக்கு மேலும் ஒரு முக்கியப் பதவி!
மாநில அளவிலான உயர்கல்வித் திட்டங்களின் மேம்பாட்டிற்கும் மற்றும் மாநிலத் திட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டங்கள் போன்றவற்றை ஒருங்கிணைக்கவும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம், தோற்றுவிக்கப்பட்டது. தற்போது பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டப் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களைத் தலைப்பு வாரியாக ஆய்வு செய்து, இணைக் கல்வி குழுவின் (Equivalence Committee) முன்பு சமர்ப்பித்து, அதன் தீர்மானங்களை அரசுக்கு அனுப்பும் பணியையும் இம்மன்றம் ஆற்றி வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து இம்மன்றத்தின் துணைத்தலைவர் பதவி நிரப்பப்படாமலும், உயர்கல்விமன்றம் திருத்தியமைக்கப்படாமலும் இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத்தைத் திருத்தியமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருத்தியமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் தலைவராக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செயல்படுவார். துணைத் தலைவராக பேராசிரியர் அ.இராமசாமி, உறுப்பினர்-செயலராக பேராசிரியர் சு.கிருஷ்ணசாமி, பணிவழி உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள்.
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் அ.இராமசாமி, அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றியவர் ஆவார். கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை இதே பணியில் அவர் பணியாற்றியுள்ளார்.
அதே போன்று, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர்-செயலராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் சு. கிருஷ்ணசாமி 33 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில் இணைப் பேராசிரியராக வரலாற்றுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், தேசிய ஆலோசனைக்குழு, ஐக்கிய நாடுகள் வளர்ச்சிக் திட்டக்குழு, உலக சுற்றுச்சூழல் ஆய்வுக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்ததோடு, தமிழ்நாடு அரசின் “நல்லாசிரியர் விருது’’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
No comments:
Post a Comment