Vijay விபத்தில் காயம் அடைந்த சிறுவன்: பிகில் படத்தை காட்டி சிகிச்சை அளித்த டாக்டர்கள்
சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கணேசபுரத்தை சேர்ந்தவர் சசிவர்ஷன்(10). அவர் தன் மாமா அரவிந்துடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது சிறுவன் கீழே விழுந்ததில் நெற்றி, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிறுவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். சசிவர்ஷனுக்கு தையல் போட டாக்டர்கள் முடிவு செய்தார்கள். அதற்கு முன்பு ஊசி போட டாக்டர்கள் முயற்சி செய்ய, சசிவர்ஷனோ பயத்தில் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்திருக்கிறார்.
டாக்டர்கள் எவ்வளவோ சொல்லியும் வலியில் துடித்தாலும் பரவாயில்லை, ஊசி மட்டும் போட விட மாட்டேன் என்று அடம்பிடித்திருக்கிறார் சசிவர்ஷன். அப்பொழுது அங்கிருந்த தன்னார்வலர் ஜின்னா என்பவர் சசிவர்ஷனிடம் உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்க விஜய் தான் பிடிக்கும் என்று பதில் அளித்திருக்கிறார்.
மேலும் காயத்தில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்த நிலையிலும் சிறுவன் தொடர்ந்து விஜய் பற்றி பேசியிருக்கிறார். இதையடுத்து ஜின்னா தன் செல்போனில்
பிகில் படத்தை போட்டு சசிவர்ஷன் கையில் கொடுத்திருக்கிறார்.
சசிவர்ஷன் தன்னை மறந்து பிகில் படத்தை பார்த்து ரசிக்க டாக்டர்களோ இது தான் நேரம் என்று ஊசி போட்டு, தையல் போட்டு சிகிச்சை அளித்துவிட்டனர்.
ஊசியே வேண்டாம் என்று அடம் பிடித்த சசிவர்ஷன் தையல் போட்டபோது கூட எதிர்க்காமல் பிகில் படத்தை ஆர்வமாக பார்த்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அறிந்த விஜய் ரசிகர்கள் மட்டும் அல்லாது மற்றவர்களும் வியந்து போயிருக்கிறார்கள்.
பிகில் படத்தை காட்டி சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment