150 இந்தியர்கள் கடத்தலா? - தலிபான்கள் விளக்கம்!
ஆப்கானிஸ்தான் நாட்டில் 150 இந்தியர்கள் கடத்தப்பட்டது குறித்து தலிபான் அமைப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில்,
சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர உலக நாடுகள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவும்
ராணுவ விமானங்கள் மூலம் காபூல் விமான நிலையத்திலிருந்து, இந்தியர்களை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்து வருகிறது.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு அருகே 150க்கும் மேற்பட்டவர்கள் தலிபான்களால் கடத்தப்பட்டுள்ளதாகவும், கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியானது. ஆனால் இந்தத் தகவலை தலிபான் அமைப்பினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
கடத்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதாகவும், அவர்களது பாஸ்போர்ட்டுகளை சோதனை செய்ததாகவும், பின்னர் கடத்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, விடுவிக்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்திற்கு வந்து விட்டதாகவும், விரைவில் சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்ப உள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment