தமிழகத்தில் செப்.1ஆம் தேதி முதல் உயரும் கட்டணம்: நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு!
மத்திய அரசு கொரோனா கால பாதிப்பை கவனத்தில் கொண்டு சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் உயராமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தமிழகத்தில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணத்தை உயர்த்த இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது 8 விழுக்காடு வரை கட்டணம் உயரலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக கொரோனா
தொற்றுநோயின் தாக்கத்தால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலை வாய்ப்பை இழந்து, அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருமானம் ஈட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் போது வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூல் செய்வதால் வாகன உரிமையாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக சரக்குகளை கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள் சுங்கக்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டு, சரக்குகளின் விலை உயர்வுக்கு வழி வகுக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து ஏழை, எளிய மக்கள் பெருமளவு
பாதிக்கப்படுவார்கள். தொழிலாளர்கள், வியாபாரிகள், பொது மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் விலைவாசி உயர்வால் சிரமத்திற்கு உட்படுவார்கள்.
கொரோனா வைரஸ் பரவல் பேரிடர் காலத்திலும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தால் பொது மக்கள் மற்றும் கனரக, இலகுரக வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும். எனவே தேசிய நெடுஞ்சாலைத் துறை தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைகளிலும், மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைகளிலும் உள்ள 14 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணத்தை ஒப்பந்தபடி உயர்த்த முடிவு செய்வது தற்போதைய சூழலில் மக்களின் பொருளாதார நிலைமைக்கு ஏற்புடையதல்ல.
No comments:
Post a Comment