இன்னும் 2 நாள் தான் இருக்கு: முதல்வருக்கு மருத்துவர்கள் வேண்டுகோள்!
செப்டம்பர் 2ஆம் தேதி, மருத்துவத் துறை மானியக் கோரிக்கையின் போது, ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
“1) தமிழகத்தில் புதிய ஆட்சியில், மாண்புமிகு முதல்வரின் வழிகாட்டுதலில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பாக செயல்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றை வெகுவாக குறைத்துள்ளோம். இந்தியாவிலேயே
முதன்முறையாக தமிழகத்தில் தான் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடுவதை செயல்படுத்தி உள்ளோம்.
2) நம் முதல்வர் ஒவ்வொரு முறை ஊரடங்கை நீட்டிக்கும் போதும், தளர்வுகளை அறிவிக்கும் பொழுதும் Medical experts எனப்படும் மருத்துவக் குழுவினருடன் தவறாமல் ஆலோசனை நடத்தியே அறிவிப்பு வெளியிடுகிறார்கள். அதுபோல தமிழகம் முழுவதும் கொரோனாவிடமிருந்து மக்களை காப்பாற்றுவதில் அரசு மருத்துவர்களின் பங்கு மிக, மிக அதிகம் என்பது நம் முதல்வருக்கு நன்றாகவே தெரியும்.
3) இருப்பினும் இந்த அசாதாரண சூழ்நிலையிலும் அரசுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
4) ஏற்கனவே முந்தைய ஆட்சியில் கோரிக்கைக்காக நீண்ட காலம் போராடியதோடு, தண்டனைகளையும், ஏராளமான
வலிகளையும், வேதனைகளையும் அனுபவித்ததோடு, மருத்துவ சங்க தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மனையும் இழந்தோம். அப்போதிருந்தே ஆட்சி மாற்றம் வராதா, தங்களுக்கு விடிவு காலம் பிறக்காதா என ஒவ்வொரு மருத்துவரும் மிகுந்த ஏக்கத்தோடு காத்திருந்தோம்.
5) எதிர்பார்த்தது போலவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதுவும் முந்தைய ஆட்சியில் எங்களுக்காக குரல் எழுப்பிய நம் முதல்வர் தற்போது கோரிக்கையை நிறைவேற்றும் இடத்தில் இருக்கிறார்கள். இருப்பினும் இதுவரை கோரிக்கை நிறைவேறவில்லை என்ற வருத்தம் ஒவ்வொரு மருத்துவரிடத்தும் இருக்கிறது.
6) சுகாதாரத் துறை செயல்பாடுகளில் 25 வது இடத்தில் உள்ள பீகாரில் கூட அரசு மருத்துவர்களுக்கு
தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படுகிறது. ஆனால் முன்னணி மாநிலமான தமிழகத்தில் மட்டும் மருத்துவர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. என்ன தவறு செய்தோம் நாங்கள்?
No comments:
Post a Comment