ஆப்கான் பெண்களுக்காக உலகம் என்ன செய்ய வேண்டும்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

ஆப்கான் பெண்களுக்காக உலகம் என்ன செய்ய வேண்டும்?

ஆப்கான் பெண்களுக்காக உலகம் என்ன செய்ய வேண்டும்?

ஒரு புகைப்படம் தொடர்பான குறிப்புடன் இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம். ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் லாட்ஃபுல்லா நஜாபிஸடா (Lotfullah Najafizada) என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் காபூல் எனும் ஒற்றை வார்த்தையுடன் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் படத்துடன் வேறு எந்த விளக்கமோ, குறிப்போ இல்லை என்றாலும், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும், இனி ஏற்பட இருக்கும் மாற்றத்தையும் இந்த ஒற்றைப் படம் உணர்த்தி விடுகிறது. அப்படியே ஆப்கானிஸ்தான் பெண்களின் துயர நிலையையும் உணர்த்திப் பதற வைக்கிறது.

அந்தப் படத்தில் அதிக நடமாட்டம் இல்லாத சாலையில் மூடப்பட்டிருக்கும் வணிக வளாகம் ஒன்றைப் பார்க்க முடிகிறது. ஒருவர் நடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், இன்னொருவர் வணிக வளாகத்தின் முன்பக்கக் கண்ணாடிச் சுவர் மீது ஏதோ செய்துகொண்டிருக்கிறார்.

வலப்பக்கம் உள்ள கண்ணாடி சுவரில் அழகான பெண் ஒருவர் சிரித்துக்கொண்டிருக்கிறார். இடப்பக்கம் உள்ள கண்ணாடிச் சுவர்கள் வெறுமையாக இருக்கின்றன. அதாவது அதில் இருந்த தோற்றம் வெள்ளையடித்து மறைக்கப்பட்டுவிட்டது. அந்தப் பணியைத்தான் கையில் வர்ணப் பூச்சுக் கருவி வைத்திருக்கும் நபர் செய்துகொண்டிருக்கிறார்.

அவ்வளவுதான் விஷயம். விளம்பரத்தில் சிரித்துக்கொண்டிருக்கும் பெண் உருவங்களை எல்லாம் வெள்ளை வர்ணம் பூசி அழிக்கும் வேலையைத்தான் அந்த நபர் செய்துகொண்டிருக்கிறார்.

தலைநகர் காபூலிலும் ஆப்கானிஸ்தானிலும் பொதுவெளியில் பெண்களுக்கு இனி இடமில்லை என்பதை இந்த படம் உணர்த்திவிடுகிறது அல்லவா?

மத அடிப்படைவாத இயக்கமாகக் கருதப்படும் தாலிபன்கள் கைகளில் ஆப்கானிஸ்தான் மீண்டும் சென்றிருக்கும் நிலையில், அந்நாட்டு மக்கள் இனி எதிர்கொள்ளக்கூடிய இன்னல்கள் குறித்தும், சோதனைகள் குறித்தும் திகைக்க வைக்கும் செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

தாலிபான்கள் ஆட்சியில் மக்களுக்கு எதிரான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டு, எண்ணற்ற கட்டுப்பாடுகள் அமலுக்கு வரலாம் எனக் கருதப்படும் நிலையில், ஆப்கானிஸ்தான் பெண்களின் நிலையே மிக மோசமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

1996 முதல் 2001 வரை தாலிபான்கள் கையில் ஆப்கானிஸ்தான் இருந்தபோது பெண்கள் கல்வி கற்கவும், பணிக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது., வீட்டை விட்டு பெண்கள் வெளியே வர வேண்டும் என்றால் ஆண் துணையுடன்தான் வர வேண்டும் எனும் கொடும் கட்டுப்பாடும் இருந்தது.

தாலிபான்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின் இந்த நிலை மெல்ல மாறியது. பெண்கள் கல்வி கற்பதும், பணி புரிவதும் சாத்தியமானது. மேலும் பல விதங்களில் பொதுவெளியில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பது சாத்தியமானது.

உள்நாட்டுப் போருக்கு மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஜனநாயக ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என்றாலும், பெண்கள் நிலையில் பெரும் முன்னேற்றம் உண்டானதை மறுப்பதற்கில்லை. மாற்றத்திற்காகத் துணிச்சலுடன் செயல்பட்ட ஆப்கானிஸ்தான் பெண்களையும் பாராட்ட வேண்டும்.

ஆனால் இந்த மாற்றம் எல்லாம் துடைத்தெறியப்பட்டு, காலச்சக்கரத்தில் அந்நாட்டு பெண்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலுக்குத் தள்ளப்படும் அபாயமே இப்போதைய ஆப்கானிஸ்தானின் வலி மிகுந்த யதார்த்தமாகிக்கொண்டிருக்கிறது.

இந்த முறை மாறியிருக்கிறோம் என்று தாலிபான் அமைப்பினர் கூறிவருவதை மீறி, பெண்களைச் சமமாக நடத்துவோம் எனும் வாக்குறுதியை மீறி, பெண்கள் இனிக் கல்வி கற்பதோ, பணிக்குச் செல்வதோ சாத்தியம் இல்லை என்பதே அங்குள்ள கள யதார்த்தம் என்பதை இந்த ஒற்றைப் புகைப்படம் உணர்த்திவிடுகிறது அல்லவா?
விளம்பரங்களில் அழகான பெண்கள் சிரித்துக்கொண்டிருக்கும் காட்சி உலகின் எந்த நகரத்திலும் திரும்பிய இடங்களில் எல்லாம் பார்க்கக்கூடியது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும் இந்தக் காட்சிகளைக் பார்க்க முடிந்தது அந்நாட்டில் ஏற்பட்டிருந்த சொற்ப முன்னேற்றம், மாற்றத்திற்கான சாட்சியாக அமைந்திருந்தது.
இப்படி விளம்பரங்களில் தோன்றும் பெண்களை எல்லாம் வெள்ளைப்பூச்சு வைத்து அழித்துக்கொண்டிருப்பது, பொதுவெளியில் இருந்து பெண்கள் அகற்றப்படுவதற்கான முன்னோட்டமாக அமைகிறது என்பதுதான் வேதனையான செய்தி.

ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பான நெஞ்சை உலுக்கும் இந்தக் காட்சி பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது.

இந்தப் பின்னணியில், இந்தித் திரைப்பட இயக்குநர் அன்ஷுமன் குரானா பகிர்ந்துகொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் பெண் இயக்குனரின் உருக்கமான வேண்டுகோளையும் கவனிப்பது அவசியமாகிறது.
சாரா கரிமீ (Sahraa Karimi) எனும் அந்தப் பெண் இயக்குநர் எப்படியோ கஷ்டப்பட்டு காபூலிருந்து தப்பித்து உக்ரைன் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு, வீடு, பணம், கார்கள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தப்பித்து வந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் திரைப்படக் கழகத்தின் முதல் பெண் தலைவர் எனும் சிறப்பு பெற்ற கரிமீ, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலகிற்கு ஒரு வேண்டுகோளை அறிக்கையாக வைத்திருந்தார். அந்த அறிக்கையைத்தான் அன்ஷுமன் குரானா பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

தாலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய இன்னல்களை கரிமீ இந்த அறிக்கையில் தெளிவாக விவரித்திருக்கிறார்.

“நொறுங்கிய இதயத்துடனும், என் அழகிய மக்களை, குறிப்பாக ஆப்கான் திரைப்பட இயக்குநர்களைத் தாலிபன்களிடமிருந்து காப்பதில் என்னுடன் இணைந்துகொள்வீர்கள் எனும் ஆழமான நம்பிக்கையுடனும் இதை எழுதுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ள கரிமீ, தாலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள மாகாணங்களில், நூற்றுக்கணக்கானோரைப் படுகொலை செய்து, குழந்தைகளைச் சிறைப்பிடித்து, சிறுமிகளைத் தங்கள் வீரர்களிடம் விற்றுவருவதாகத் தெரிவித்துள்ளார்.

தலைநகர் காபூலில் ஆயிரக்கணக்கானோர் வெளியேறத் துடித்துக்கொண்டிருப்பதையும், குழந்தைகள் பால் இல்லாமல் செத்துக்கொண்டிருப்பதையும், குறிப்பிடுபவர் மிக மோசமான மனித துயரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் உலகம் அமைதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உலகின் அமைதிக்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டாலும் இது நியாயமானதல்ல என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். எங்கள் மக்களைக் கைவிடும் இந்த முடிவு தவறானது என எங்களுக்குத் தெரியும், அவசரமாகப் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டிருப்பது எங்கள் மக்களுக்கான துரோகம் என்பதும் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளவர் இருபது ஆண்டுகளில் பெற்ற பல நல்ல முன்னேற்றங்களையும் பலன்களையும் இழந்துவிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உங்கள் குரல் எங்களுக்கு தேவை என வேண்டுகோள் வைத்துள்ளவர், ஆப்கானிஸ்தானுக்கு வெளியே எங்களுக்கான குரலாக இருங்கள் என்றும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நடப்பவற்றைக் கண்டுகொள்ளாமலோ அல்லது இதுதான் அங்கு இயல்பு என்று நினைத்து அலட்சியமாகவோ இருந்துவிடாமல், இந்த நிலை மாறக் குரல் கொடுங்கள் என்பதுதான் அவரது வேண்டுகோள்.


இந்த வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பது நம் ஒவ்வொருவரும் கடமையும்தான். ஊடகங்களும் உலக நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் ஏதாவது செய்தாக வேண்டும் என்றால், அதை வலியுறுத்தும் வகையில் நாம் ஆப்கான் மக்களை மறக்காமல் இருப்போம். அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவோம். ஆப்கானிஸ்தான் செய்திகளை அலட்சியம் செய்யாமல் தொடர்ந்து வாசிப்போம். அங்கு நிகழ்வது மனிதத் துயரம் என்பதை உணர்வோம். அதை மாற்ற நம்முடைய சிறு கவனமும் தேவையானதாகவே இருக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad