பயிர்க் கடன் மோசடியில் விவசாயிகளும் உடந்தையா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 30, 2021

பயிர்க் கடன் மோசடியில் விவசாயிகளும் உடந்தையா?

பயிர்க் கடன் மோசடியில் விவசாயிகளும் உடந்தையா?

இந்தியா என்றவுடன் நினைவுக்கு வருவது, ‘விவசாய நாடு’ என்பதுதான். நம் நாட்டின் வேளாண்மை பத்தாயிரம் வருடங்களுக்கும் மேலான வரலாறு கொண்டது.

இன்றும், விளைநில உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வேளாண்மை, அதற்குத் தொடர்புள்ள துறைகளான காடுவளம், மர வேலைகள் போன்றவை ஒட்டுமொத்த உள்நாட்டுத் தயாரிப்புகளில் சுமார் 16 சதவீதத்தைக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, மொத்த வேலைவாய்ப்பில் 60 சதவீதத்தை விவசாயமே அளிக்கிறது.

பலரும் அறியாத பெருமைகளும் உண்டு. பால், முந்திரி, தேங்காய், தேயிலை, இஞ்சி, மஞ்சள், கருமிளகு ஆகியவற்றை உலகிலேயே அதிகமாக உற்பத்திசெய்யும் நாடு இந்தியாதான். கோதுமை, அரிசி, சர்க்கரை, நிலக்கடலை, வாழை, சப்போட்டா, உள்நாட்டு மீன் உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடம். புகையிலை உற்பத்தியில் மூன்றாவது இடம். உலகிலேயே அதிகமான கால்நடை எண்ணிக்கையையும் இங்குதான் உள்ளது.

ஆனாலும் இங்கு விவசாயம் என்பது, மரியாதைக்குரிய தொழிலாகப் பார்க்கப்படுவதில்லை என்பது ஆச்சரியம். அதோடு, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் ஏராளம்.

‘பெய்தும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும்’ என மழை குறித்து ஆதங்கமாக விவசாயிகள் சொல்வது காலம் காலமாகத் தொடர்கிறது. அதே போல விவசாயபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத சூழலும் நிலவுகிறது. இடுபொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி செலவு உயர்வு, விவசாய ஆட்கள் கிடைக்காதது போன்ற பல இடர்ப்பாடுகளும் நிலவுகிறது.

இதையெல்லாம் மீறித்தான் விவசாயத்தில் பெரும்பான்மையான மக்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

அதிரவைத்த மோசடி

ஆனால், விவசாயிகள் ஏமாற்றப்படுவது என்பதும் நடக்கவே செய்கிறது. ஒட்டுமொத்த நாட்டையும் அதிரவைக்கும் மிகப்பெரிய மோசடி தமிழ்நாட்டில் நடந்தது.

‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்’ என்ற பெயரில் “பி.எம். கிசான்” என்று அழைக்கப்படும் விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டத்தை 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றிய அரசு தொடங்கியது. வருடத்துக்கு 3 தவணைகளில் தலா ரூ.2 ஆயிரம் என ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கும் திட்டம் இது.

‘பெரிய அளவில் இல்லாவிட்டாலும், எங்களுக்கு உதவிகரமான திட்டமே இது!’ என விவசாயிகள் நினைத்தார்கள்.

விவசாயிகள், தங்களிடம் உள்ள விவசாய நிலத்துக்கான ஆவணங்கள், ஆதார் எண், செல்போன் எண், வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களை விவசாயத்துறை அலுவலரிடம் வழங்கலாம் என்று கூறப்பட்டது. பிறகு, விவசாயிகளே இணையத்தளம் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று கூறியது ஒன்றிய அரசு.

விண்ணப்பங்களை விவசாயத் துறை அலுவலர் சரிபார்த்து, உதவி இயக்குனர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும். இதற்காக அவர்களுக்கு தனியாகக் கடவுச் சொல் வழங்கப்பட்டது. இத்தனை விதிமுறைகள் இருந்தும் பெரும் முறைகேடு நடந்தது. தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்திற்காக ஒன்றிய அரசு, ரூ.2,459 கோடி ஒதுக்கியதில் பெரும் தொகை, மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது பெரும் தொகை விவசாயிகளுக்குச் சென்று சேரவில்லை. ஐந்தரை லட்சம் பேர், போலியாக விவசாயிகள் என பட்டியலில் இணைக்கப்பட்டு, அவர்கள் பெயரில் ரூ.110 கோடி வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை மாவட்டங்களிலிருந்து போலியாக விவசாயிகள் பெயர் இணைக்கப்பட்டு இந்தத் தொகை கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது.

இது ஓர் உதாரணமே. இது போல், விவசாயிகளுக்கான திட்டங்கள் பலவற்றில் மோசடிகள் நடந்துள்ளன. தவிர, மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்துப் போராடி வருவது தெரிந்ததே.

இப்படி, இயற்கை, பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது, மோசடி, சட்டங்கள் உள்ளிட்ட பலவகை பிரச்சினைகளை விவசாயிகள் சந்திக்கிறார்கள்.

பயிர்க் கடன் வழங்கியதில் மோசடி
crop loan weiver
அதே நேரம், ஒரு மோசடியில் விவசாயிகளுக்கும் தொடர்பிருக்கிறதே என்கிற குரலும் எழாமல் இல்லை. இதற்குக் காரணம், தமிழ்நாடு சட்டப்பேரவையில், கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்த ஒரு தகவல்தான்.


‘கடந்த அதிமுக ஆட்சியில் பயிர்க் கடன் வழங்கியதில் ரூ.516 கோடி அளவில் முறைகேடு நடந்திருக்கிறது’ என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார் அவர்.

மேலும் விரிவாக, “சாகுபடி பரப்பளவை அதிகரித்துக் காண்பித்து மோசடியாகக் கடன் அளிக்கப்பட்டிருக்கிறது. பயிருக்கு வழங்க வேண்டிய கடனைவிடப் பல மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, சோளம் விதைத்தவர், மஞ்சள் விளைவித்துள்ளார் எனத் தவறாகச் சுட்டிக்காட்டப்பட்டுக் கூடுதல் கடன் தொகை அளிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ரூ.516 கோடி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. சேலம் மற்றும் நாமக்கல்லில் மட்டும் 503 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது” என்றார் அமைச்சர்.

இன்னும் ஓர் அதிர்ச்சியாக, “ கடன் தள்ளுபடி எந்த நாளில் இருந்து என அறிவிக்கப்பட்டதோ, அதற்கு ஒரு நாளுக்கு முன்பாக அளிக்கப்பட்ட கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. போலி நகைகளை வைத்துக் கடன் பெற்றதும், அத்தொகை தள்ளுபடி செய்யப்பட்டதும் தெரியவருகிறது” என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இந்த மோசடியில், அல்லது, இந்த மோசடியிலும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், அதிகார மட்டத்தினர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் திட்டமிடாமல் இந்த மோசடி நடந்திருக்காது.

விவசாயிகளுக்குப் பங்கு இல்லையா?

farmers
அதே நேரம், அவர்கள் மட்டும்தான் தவறு செய்தார்களா? அவர்களுக்கு உடந்தையாக (சில, பல) விவசாயிகள் இல்லையா என்பதுதான் இப்போது எழும் கேள்வி.

பயிரை மாற்றிக் கடன், போலி நகை வைத்துக் கடன், நில அளவை அதிகரித்துச் சொல்லிக் கடன்… இதெல்லாம் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் சம்மதம் இன்றி நடந்திருக்குமா?

தமிழக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியனிடம் இக்கேள்வியை வைத்தோம். ஆவேசப்பட்ட அவர், “தற்போதுதான் புதிய ஆட்சி பொறுப்பேற்றிருக்கிறது. ஆகவே இந்த அரசு மீது பழி போட விரும்பலை. விவசாயிக்குக் கடன் அளிக்கச் சான்றிதழ் கொடுப்பது கிராம நிர்வாக அதிகாரிதானே! அடங்கல் பதிவேடு அடிப்படையில்தானே அவர் சான்றிதழ் கொடுப்பார்! தவறு நடந்தது என்றால் அதிகாரிகள்தானே காரணம்” என்று பொரிந்து தள்ளினார்.

“ஒரு பயிருக்குப் பதிலாக வேறு பயிருக்குக் கடன் என்பதெல்லாம் சரியான குற்றச்சாட்டு அல்ல. உதாரணமாக, சம்பா நெல் சாகுபடிக்காக ஆகஸ்ட் மாதம் கடன் பெற மனு அளிப்போம். பலவித நடைமுறைகளுக்குப் பிறகு அது டிசம்பர் மாதம்தான் வந்து சேரும். அப்போது சம்பா சாகுபடி அறுவடை முடிந்து உளுந்து நட்டிருப்போம். இதற்குக் காரணம் விவசாயியா? தவிர, 1984இல் எஸ்.டி.சோமசுந்தரம் வருவாய் துறை அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் வருவாய் நில உடமைப் பதிவேடு பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அதை அப்டேட் செய்யவில்லை. அதனால் நிலத்தின் உடமையாளர் மாறியிருந்தாலும், பதிவேடுகளில் பழைய பெயரே இருக்கும். கோயில் நிலத்தைக் குத்தகை எடுத்தவர் அதை விட்டுச் சென்றுவிட்டாலும், அவர் பெயரே இன்றும் இருக்கும். கடன் மோசடிகள் நடக்க இது போன்ற அரசு குளறுபடிகளே காரணம். ஆகவே வருவாய் நில உடமை பதிவேட்டை அப்டேட் செய்ய வேண்டும் என்கிற எங்களது நீண்ட காலக் கோரிக்கையை இந்த அரசாவது செய்ய வேண்டும்” என்று விளக்கத்துடன் ஒரு கோரிக்கையையும் அவ்ர் முன்வைக்கிறார்.

இதைச் செய்யாததற்குக் காரணம் அரசியல்வாதிகளும் பெரு நிலக்கிழார்களும்தான். இவர்கள்தான் நில உச்சரவம்புச் சட்டத்தை மீறி அதிக அளவில் நிலங்களை வைத்திருக்கிறார்கள். தங்களது தில்லுமுல்லு தெரிந்துவிடும் என்பதற்காக வருவாய் நில உடமைப் பதிவேட்டை அப்டேட் செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்றும் பாண்டியன் கூறுகிறார். “சில விவசாயிகள் மீதும் தவறு இருக்கலாம். அதையெல்லாம் நடக்காமல் தடுக்க வேண்டியது அரசுதானே?” என்கிறார் முத்தாய்ப்பாக.

அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், அதிராக வர்க்கத்தினர் உதவி இன்றி ஊழல், மோசடி நடக்காதுதான். அதே நேரம், சில விவசாயிகள் ஈடுபடாமல் இது நடக்காது. குறைந்த வட்டியில் அரசு பயிர்க் கடன் தருவது நமக்காகத்தான். மக்கள் பணமான அதை ஏமாற்றும் வகையில் நாம் நடந்துகொள்ளக் கூடாது என்ற பரப்புரையை ஆகவே அரசியல் கட்சிகளின் விவசாயப் பிரிவுகள், தனித்த விவசாய அமைப்புகள் ஆகியவை விவசாயிகள் மத்தியில் மேற்கொள்ள வேண்டும்.

இது போன்ற தவறுகள் தொடர்ந்தால், தற்போது விவசாயிகள் மீது பொது மக்களுக்கு இருக்கும் நல்ல எண்ணம் மாறி, இவர்களுக்கு நிதி உதவி தேவையா என்று கேட்கும் நிலை உருவாகக்கூடும்.

No comments:

Post a Comment

Post Top Ad